SOURCE :- BBC NEWS

வெள்ளியன்று இரான் மீது எதிர்பாராத வகையில் தாக்குதல்களை நடத்திய பிறகு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரடியாக இரானிய மக்களுக்கு உரையாற்றினார். ஆங்கிலத்தில் பேசிய அவர் “கொடிய மற்றும் அடக்குமுறை ஆட்சிக்கு” எதிராக நிற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது எனத் தெரிவித்தார்.
இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள், “நீங்கள் சுதந்திரத்தை அடைவதற்கான பாதையை தெளிவுபடுத்தியுள்ளது” என கூறியுள்ளார்.
தற்போது இரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல்கள் தீவிரமடைந்து, இலக்குகளும் பரவலாகி வரும் நிலையில் இஸ்ரேலின் உண்மையான இலக்கு தான் என்ன? எனப் பலரும் கேட்கின்றனர்.
இவை, முதல் தாக்குதல்கள் நடந்த வெள்ளியன்று நெதன்யாகு கூறியதைப் போல “இரானின் அணு ஆயுத மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுற்றுதல்களை” முடிவுக்குக் கொண்டு வருவது மட்டும் தானா?
பொருளாதார தடைகளை நீக்குவதற்கு மாற்றாக இரானின் அணுசக்தி திறன்களை கட்டுப்படுத்தும் புதிய ஒப்பந்தத்தை அடைவதற்காக மேற்கொள்ளப்படும் அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வருவதும் அவரது இலக்கில் உண்டா?
அல்லது சுதந்திரத்திற்கான பாதையை தெளிவுபடுத்தியதாக இரானிய மக்களிடம் கூறிய செய்தி இரானில் மதகுரு ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் பெரிய நோக்கமும் அதில் உள்ளதா?

பட மூலாதாரம், Getty Images
நெதன்யாகுவின் திட்டங்களை அறிந்தவர்கள் யார்?
இஸ்ரேலில் நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதமரின் அரசியல் வாழ்க்கை, இரானிய இஸ்லாமியக் குடியரசால் வரப்போகும் ஆபத்துகளை உலகுக்கு எச்சரிக்கும் அவரின் தனிப்பட்ட இலக்கால் உந்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் அவர் காட்டிய குண்டுகள் அடங்கிய பெட்டியில் தொடங்கி, கடந்த 20 மாதங்களாக எரிந்துக் கொண்டிருக்கும் பிராந்திய போரால் ஐ.நாவுக்கு செல்லாமல் தவிர்த்தது வரை இரான் தான் அனைத்தையும் விட மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்பது தான் அவரில் இலக்காக உள்ளது.
கடந்த சில வருடங்களில் பல முறை இரானின் அணுசக்தி தளங்கள் மீது ராணுவ தாக்குதல்களுக்கு நெதன்யாகு உத்தரவிடாமல் அமெரிக்க அதிபர்களும், அவரின் சொந்த தளபதிகளுமே தடுத்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் அனுமதி வழங்கவில்லை எனக் கூறுகிறார். ஆனால் அத்தகைய ஒரு சிறு சமிக்ஞை கூட போதுமானதாக இருக்கும்.
“தற்போது அவர் மோதலை தொடங்கிவிட்டதால், அதில் முழுவதுமாக இறங்கிவிடுவார்” என நெதன்யாகுவின் திட்டத்தை ஒரு மேற்கத்திய அதிகாரி விவரித்தார். இஸ்ரேலின் முதன்மையான நோக்கம் இரானின் அணுசக்தி திட்டத்தை முடக்க வேண்டும் என்பது தான் என்கிற பார்வையையும் அவர் குறிப்பிட்டு காட்டுகிறார்.
இந்த முடிவு பல்வேறு நாடுகளாலும், சர்வதேச அணு சக்தி முகமையாலும் கண்டிக்கப்பட்டுள்ளது. அதன் டைரக்டர் ஜெனரல், “எந்தச் சூழலிலும் அணுசக்தி நிலையங்கள் தாக்கப்படக் கூடாது என்பதை நான் பலமுறை கூறியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். சர்வதேச சட்டங்களின் கீழ் இது சட்டவிரோதமானது என வாதிடும் சட்ட வல்லுநர்களாலும் இது கண்டிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது பலரும் இஸ்ரேல் பிரதமர் அவரின் ஆலோசகர்கள் மற்றும் கூட்டாளிகள் பின் தொடரும் அதே இலக்குகளைத் தான் கொண்டுள்ளாரா எனக் கேட்கின்றனர்.

பட மூலாதாரம், AFP via Getty Images
“நெதன்யாகு தனிப்பட்ட முறையில் ஆட்சி மாற்றத்தின் மீது இலக்கு வைத்துள்ள நிலையில், இஸ்ரேலின் அரசியல் மற்றும் ராணுவ கட்டமைப்பு இரானின் அணுசக்தி திட்டத்தை சீர்குலைக்க வேண்டும் என்பதிலே குறியாக இருக்கின்றது” என்கிறார் சாத்தம் ஹவுஸ் ஆய்வு நிறுவனத்தின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்கா திட்டத்தின் இயக்குநரான முனைவர் சனம் வகில்.
இரண்டாவது இலக்கு கடினமானதாக இருக்கலாம், ஆனால் எட்டக்கூடியது தான் என்று கூறும் அவர் “முதல் இலக்கு, இத்தகைய குறுகிய மற்றும் தீவிரமான மோதலில் எட்டுவது கடினம்” என்றார்.
இரானின் அணுசக்தி திட்டத்தை அழிப்பது தான் நோக்கமா?
இஸ்ரேலின் நடவடிக்கைகளை, தனது இருப்புக்கான அச்சுறுத்தல்களை அழிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்கிற தோற்றத்தை வழங்க நெதன்யாகு முயல்கிறார். இரானின் பதில் தாக்குதல்கள், அணு குண்டு தயாரிப்பதற்கான கடைசிப்படி எனப் பிரகடனப்படுத்துகிறார் நெதன்யாகு.
இரான், அணு ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாது என்கிற இவரின் பிரகடனத்தை மேற்கத்திய கூட்டாளிகளும் வழிமொழிகின்றனர். ஆனால் இந்த விவகாரத்தில் நெதன்யாகுவின் அவசரமும் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது.
அணு குண்டு தயாரிக்கும் திட்டம் தன்னிடம் இல்லை என இரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. கடந்த மார்ச் மாதம், அமெரிக்க தேசிய உளவு அமைப்பின் இயக்குநரான துள்சி கப்பார்ட் ‘இரான் அணுகுண்டு தயாரிக்கவில்லை’ என்பதை அமெரிக்க உளவு அமைப்புகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றன எனத் தெரிவித்திருந்தார்.
சர்வதேச அணுசக்தி முகமையும் (ஐஏஇஏ) அதனுடைய காலாண்டு அறிக்கையிலும் இரான் 60% தூய்மை கொண்ட யுரேனித்தை சேகரித்து வருகிறது எனத் தெரிவித்துள்ளது. இது 9 அணு குண்டுகளை தயாரிப்பதற்குத் தேவையான 90% தூய்மை வாய்ந்த ஆயுத ரகத்தை விட தொழில்நுட்ப ரீதியில் சற்று குறைவாகவே உள்ளது.
முதல் சில நாட்களில் நடான்ஸ், இஸ்ஃபஹான் மற்றும் ஃபோர்டோவ் என்கிற இரானின் 3 முக்கிய நிலைகள் குறிவைக்கப்பட்டுள்ளன. நடான்ஸில் விமான எரிபொருள் செறிவூட்டல் ஆலை அழிக்கப்பட்டது என ஐஏஇஏ தெரிவித்துள்ளது.
இஸ்ஃபஷானில் உள்ள நான்கு “முக்கியமான கட்டடங்களும்” சேதமடைந்துள்ளதாக ஐஏஇஏ தெரிவித்துள்ளது. இரானுக்கு ஏற்பட்ட சேதம் “மிகப்பெரியது” என இஸ்ரேல் கூறும் நிலையில், அவை மிகவும் குறைவானவை என இரான் தெரிவித்துள்ளது.
தற்போது வரை 9 அணுசக்தி விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ தளபதிகளைக் கொன்றதன் மூலம் இரானின் “அறிவு ஆதாரங்களை” இஸ்ரேல் தாக்குகிறது. ராணுவ நிலைகள், ஏவுகணை ஏவும் தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளை உள்ளடக்கிய இஸ்ரேலின் இலக்குகள் தற்போது பொருளாதாரம் மற்றும் எண்ணெய் வளங்களை நோக்கி நகர்ந்து வருகிறது.
இரானும் தனது தாக்குதல் இலக்குகளை விஸ்தரித்து வருகிறது. இதனால், இருநாடுகளிலும் பொது மக்கள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

பட மூலாதாரம், Maxar Technologies/ Getty Images
ஆனால் இரானின் அணுசக்தி திட்டத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமென்றால், இரானின் மிகப்பெரிய மற்றும் பாதுகாக்கப்பட்ட இடமான ஃபோர்டோவிற்கு இஸ்ரேல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்த வேண்டும். ஒரு மலைக்கு கீழே பாதாளத்தில் அமைந்துள்ள வளாகத்தில் இரான் அணுஆயுதம் தயாரிப்பதற்கு நெருக்கமான, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தேக்கி வைத்திருப்பதாக வல்லுநர்கள் நம்புகின்றனர்.
இஸ்ரேலின் தற்போதைய நோக்கம் அதனை இரானுக்கு கிடைக்க விடாமல் செய்ய வேண்டும் என்பது தான் என இஸ்ரேலிய ஊடகங்களில் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிக அளவிலான பாறைகளை ஊடுருவிச் சென்று ஆழமான இடங்களை அழிக்கும் குண்டுகள் இஸ்ரேலிடம் இல்லை. ஆனால் அமெரிக்க விமானப் படையிடம் உள்ளது. இவை எம்.ஒ.பி என அழைக்கப்படுகின்றன. இவை மேசிங் ஆர்ட்னன்ஸ் பெனிட்ரேட்டர் என அழைக்கப்படும். பெரிய பாதிப்பு ஏற்படுத்த வேண்டுமென்றால் பல நாட்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட வேண்டும்.
“நெதன்யாகு டிரம்பை அழைத்து ‘நான் இதையெல்லாம் செய்துவிட்டேன், பி-2 விமானங்களுக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை நான் உறுதி செய்துவிட்டேன். ஆனால் என்னால் அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாது’ எனக் கூறுவது தான் சாத்தியமான சூழ்நிலையாக இருக்கும்” எனத் தெரிவிக்கிறார் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உள்ள உலகளாவிய எரிசக்தி கொள்கைக்கான மையத்தில் உள்ள முன்னாள் அமெரிக்க அதிகாரியும் இரான் நிபுணருமான ரிச்சர்ட் நெப்யூ.
“அதிபர் டிரம்ப் எந்த பக்கம் சாய்வார் எனத் தெளிவாக தெரியாது” என மேற்கத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமைதி பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்க திட்டமா?
டிரம்ப் முன்னும் பின்னுமாக நிலைப்பாட்டை மாற்றி வருகிறார். கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இரானை ராணுவ ரீதியாக மிரட்டுவதை நிறுத்த வேண்டும் என இஸ்ரேலை வலியுறுத்தினார். ஏனென்றால் தாக்குதல் என்பது டிரம்ப் அதிகம் விரும்பும் இரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்துவிடும்.
ஆனால் இஸ்ரேல் தாக்கிய பிறகு, அந்த தாக்குதல்களை “சிறப்பானது” என்று பாராட்டியவர் “இனி அதிகம் வரப்போகிறது” என்றும் எச்சரித்திருந்தார். ஆனால் இவை ஒப்பந்தத்தை நோக்கி இரானை நகர்த்தும் என்றும் அவர் கூறுகிறார்.
இதன் பிறகு ஞாயிறன்று அவரின் ட்ரூத் சோசியல் தளத்தில், “நாம் விரைவில் இஸ்ரேல் – இரான் இடையே அமைதியை நிலைநாட்டுவோம். பல அழைப்புகளும் சந்திப்புகளும் தற்போது நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
ஞாயிறன்று ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடக்கவிருந்த பேச்சுவார்த்தை, இஸ்ரேல் உடனடியாக தாக்குதல் நடத்தாது என்று இரானை நம்ப வைப்பதற்கான சதித்திட்டம் தான் என இரான் சந்தேகிக்கிறது. வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இஸ்ரேலின் தொடர் தாக்குதலை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
மற்றவர்கள் இந்த நேரத்தை முக்கியமானதாகப் பார்க்கின்றனர். “இஸ்ரேலின் எதிர்பாராத தாக்குதல்கள் இரானின் அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளும் அதிபர் டிரம்பின் சாத்தியங்களை இல்லாமல் ஆக்கவே திட்டமிடப்பட்டவை” என்கிறார் வெளியுறவுக்கான ஐரோப்பிய கவுன்சிலில் உள்ள மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்கா திட்டத்தின் துணைத் தலைவரான எல்லி ஜெரன்மாயே.
“சில இஸ்ரேலிய அதிகாரிகள், இந்தத் தாக்குதல்கள் ராஜாங்க பாதையில் அமெரிக்க தரப்பை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது என வாதிடுகின்றனர், ஆனால் அதன் நேரமும் அளவும் பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்க வேண்டும் என்பதற்கானது தான் என்பது தெளிவாக உள்ளது” என்றார் அவர்.
“ஒரு ஒப்பந்தம் எட்டும் தூரத்தில் தான் இருந்தது” என இந்தப் பேச்சுவார்த்தைகளில் தொடர்புடைய அதிகாரிகள் கடந்த வாரம் என்னிடம் தெரிவித்தனர். ஆனால் இவை அனைத்தும், இரான் ஆக்கப்பூர்வ சிவில் திட்டங்களுக்கானதாக இருந்தாலும் ஒற்றை இலக்க அளவில் கூட யுரேனியம் செறிவூட்டலை மேற்கொள்ளக் கூடாது என்ற உச்சபட்ச கோரிக்கையில் இருந்து அமெரிக்கா எவ்வளவு தூரம் இறங்கி வருகிறது என்பதைப் பொறுத்து தான். இரான் இதனை ஏற்க கூடாத ஒன்றாக கருதுகிறது.
டிரம்ப் தனது முதல் ஆட்சியில் நெதன்யாகுவின் இடைவிடாத கோரிக்கைகளுக்கு இணங்க 2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு இரான் 3.67% (அணு மின் நிலையங்களுக்கான எரிபொருளை தயாரிக்கக்கூடிய அளவு) என்கிற அளவில் மட்டுமே அதன் யுரேனியம் செறிவூட்டல் இருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டில் இருந்து விலகியது.
தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ள இரானுக்கு 60 நாட்கள் கெடு விதித்தார் டிரம்ப். இந்த விவகாரத்தில் அனுபவம் வாய்ந்த மத்தியஸ்தர்கள், இத்தகைய சிக்கலான விவகாரத்திற்கு இது மிகவும் குறைவான காலகட்டம் என உணர்ந்தனர்.
61வது நாளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது
பேச்சுவார்த்தைக்கான பாதை தற்போது இல்லாமல் போய் விட்டது எனக் கூறும் வகில் “பதற்றத்தைத் தணிக்க பிராந்திய அளவிலான முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன” என்றார்.
நெதன்யாகு என்ன மனநிலையில் உள்ளார்?
தற்போது அதிகரித்துள்ள பதற்றம் அணுசக்தி கையிருப்புகள், சூப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பற்றியது அல்ல என இரான் நம்புகிறது.
“இவை, ஒரு நாடாக இரானின் திறன்களை அதன் ராணுவ வலிமையை குறைத்து இரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான அதிகார சமநிலையை வெகுவாகக் குறைத்து, முடிந்தால் இஸ்லாமியக் குடியரசு ஆட்சியை மொத்தமாக கவிழ்ப்பதற்கான இஸ்ரேலின் திட்டம் என்றே இரான் பார்க்கிறது” என்கிறார் இரான்ஸ் கிராண்ட் ஸ்ட்ராடஜி புத்தகத்தின் ஆசிரியரும் சர்வதேச விவகாரங்களுக்கான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பள்ளியில் மத்திய கிழக்கு படிப்புகள் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான பேராசிரியர் வலி நஸ்ர்.
ஆனால் இரான் பொதுமக்கள் இதற்கு எவ்வாறு பதில் அளிப்பார்கள் என்பது தெளிவாக இல்லை.

பட மூலாதாரம், Getty Images
9 கோடி மக்கள் தொகை கொண்ட அந்த நாடு பல வருடங்களாக சர்வதேச தடைகள் மற்றும் நிறுவனமயப்படுத்தப்பட்ட ஊழலால் தவிக்கிறது. விலைவாசி உயர்வு தொடங்கி வேலையில்லா திண்டாட்டம், தண்ணீர் மற்றும் மின்சார தட்டுப்பாடு மற்றும் பெண்களை கண்காணிக்கும் கலாசார காவலர்கள் வரை இரானில் பல விவகாரங்களில் போராட்டங்கள் ஒவ்வொரு வருடமும் தொடங்கி மறைந்திருக்கின்றன. 2022-ல் அதிக சுதந்திரம் வேண்டி எதிர்பாராத அளவிலான போராட்டங்கள் நடைபெற்றன. அவையெல்லாம் கடுமையான முறையில் கட்டுப்படுத்தப்பட்டன.
தற்போது பொது மக்களின் மனநிலையை ஆய்வு செய்துள்ளார் நஸ்ர். “தொடக்கத்தில் பிரபலமில்லாத நான்கு, ஐந்து தளபதிகள் கொல்லப்பட்ட போது ஒரு விதமான நிம்மதியுணர்வு இருந்தது. ஆனால் தற்போது குடியிருப்பு கட்டடங்கள் தாக்கப்பட்டு, பொதுமக்கள் கொல்லப்படுகிறர்கள், நாட்டின் எரிசக்தி மற்றும் மின் கட்டமைப்புகளும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன”
“பெரும்பாலான இரானியர்கள் தங்கள் நாட்டின் மீது குண்டுகளை ஏவி வரும் ஆக்கிரமிப்பாளர் வசம் சாய்ந்து அதனை விடுதலையாகப் பார்க்கும் சூழ்நிலை இருப்பதாக எனக்கு தெரியவில்லை” என்றார்.
ஆனால் நெதன்யாகுவின் கூற்றுகள் பரவலான தாக்குதலைப் பற்றியே உள்ளன.

பட மூலாதாரம், AFP via Getty Images
சனிக்கிழமை, ஆயதுல்லா அலி காமனெயி அரசின் அனைத்து இடங்களையும், இலக்குகளையும் குறிவைத்து தாக்குவோம் என அவர் எச்சரித்திருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை ஃபாக்ஸ் நியூஸிற்கு அளித்த பேட்டியில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையில் ஆட்சி மாற்றம் ஒரு அங்கமாக இருக்கிறதா என்கிற கேள்விக்குப் பதிலளித்த இஸ்ரேல் பிரதமர், “அது சாத்தியமான முடிவாக இருக்கும், ஏனென்றால் இரான் அரசு மிகவும் பலவீனமாக உள்ளது” என்றார்.
“நாட்டின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிடுவோம் என்கிற அரசின் அச்சத்தை உளவியல் போர் தந்திரத்தின் ஒரு அங்கமாக இஸ்ரேல் கையாளப் பார்க்கிறது” என்கிறார் நெதன்யாகு சுயசரிதையின் ஆசிரியரும், தி எகனாமிஸ்டின் இஸ்ரேல் நிருபருமான அன்ஷெல் பிஃபர்.
“இரான் அரசின் வீழ்ச்சியை யூகிப்பதோ அல்லது தூண்டுவதோ அர்த்தமற்றது என்பது இஸ்ரேல் உளவு அமைப்பின் ஒருமித்த எண்ணமாக உள்ளது. இது உடனடியாக நடக்கலாம் அல்லது 20 வருடங்களிலும் நடக்கலாம்” என்றார்.
ஆனால் நெதன்யாகுவின் எண்ணம் வேறாக இருக்கலாம் என பிஃபர் நம்புகிறார். “‘தாம் திடமான நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டுடன் இருப்பதாக நெதன்யாகு நம்பும் மனநிலையில் இருக்கும் சாத்தியங்கள் அதிகம்” என அவர் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை இரவில், இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனேயியை கொல்லும் இஸ்ரேலின் திட்டத்தை அதிபர் டிரம்ப் நிராகரித்துவிட்டார் என ஒவ்வொரு அமெரிக்க ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. ராய்ட்டர்ஸ் இரண்டு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்ட போது இந்தப் பேச்சு தொடங்கியது.
இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கிடியன் முதல் அந்நாட்டின் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் தலைவர் ட்ஸச்சி ஹனெக்பி வரை முக்கிய தலைவர்கள் பலரும் தங்களது இலக்கு இரானின் அரசியல் தலைமை இல்லை என்று கூறி வருகின்றனர். ஆனால், இந்த தருணம் என்பது குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மட்டுமே செல்லுபடியாகக் கூடியது என்று ஹனெக்பி மேலும் கூறினார்.
ஆபத்தான சண்டை மற்றும் கணிக்க முடியாத அமெரிக்க அதிபர் டிரம்பால்தான் இதன் முடிவு தீர்மானிக்கப்படும்.
“இதன் வெற்றி அல்லது தோல்வி என்பது இதற்குள் அமெரிக்காவை இழுக்க முடியுமா என்பதைப் பொறுத்து தான் உள்ளது” என்கிறார் அமெரிக்காவின் மத்திய கிழக்கு திட்ட தலைவரும் இஸ்ரேல் அரசின் முன்னாள் ஆலோசகருமான டேனியல் லெவி.
“எதிர்காலத்தில் அமெரிக்காவால் மட்டுமே இதன் முடிவுகளை தீர்மானித்து, இந்த சண்டையை ஒரு நிறுத்தத்திற்குக் கொண்டு வர முடியும்” என்று அவர் கூறினார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU