SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ள லாஸ் ஏஞ்சலிஸுக்கு அருகே உள்ள ஒரு வன்பொருள் கடையின் கார் நிறுத்துமிடத்தில், ஜுவானும் அவரது நண்பர்களும் கூடியிருந்தனர்.
பொதுவாக, தினக்கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் அங்கு கூடியிருப்பர். அந்தக் கூட்டத்தில் உள்ள ஆவணமற்ற குடியேறிகள் பலர், அங்குள்ள கடைக்காரர்களிடமிருந்தோ அல்லது ஒப்பந்த வேலை தரும் ஆட்களிடமோ வேலை தேடுகிறார்கள்.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை, பாரமவுண்ட் புறநகரில் உள்ள ஹோம் டிப்போவுக்கு (கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட வன்பொருட்களை விற்பனை செய்யும் கடை) வெளியே, கூரை போடுதல், பழுதுகளை சரி செய்வது மற்றும் வண்ணம் பூசுதல் போன்ற வேலைகளுக்கு உதவுவதாக அறிவித்துக் கொண்டு இரண்டு சிறிய வாகனங்கள் மட்டுமே நின்றிருந்தன. இந்த பகுதியில் 82% க்கும் மேற்பட்டோர் ஹிஸ்பானிக் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இங்கு தினக்கூலி தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதாக பரவிய வதந்திகள் காரணமாக, அந்தக் கடை குடியேற்றப் போராட்டத்தின் மையமாக மாறியது. அதன் மறுநாள் முதலில் மேற்கூறிய சம்பவம் நடந்தது.
அந்த சமூகத்தில் வசிக்கும் பலர், அப்பகுதியில் குடியேற்ற அமலாக்கத் துறையின் வாகனங்களைக் கண்டதாக பிபிசியிடம் கூறினர்.
அதனால் அப்பகுதியில் உடனடியாக பயமும் குழப்பமும் ஏற்பட்டது.
பிறகு, அமெரிக்கா முழுவதும் ஆவணமின்றி வாழும் குடியேறிகள் வேலை தேடிச் செல்லும் ஹோம் டிப்போவில், தினக்கூலி தொழிலாளர்கள் சோதனை செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

பட மூலாதாரம், Getty Images
அதனைத் தொடர்ந்து, ஹிஸ்பானிக் மக்கள் அதிகம் வசிக்கும் இந்த நகரத்தில் போராட்டங்கள் வெடித்தன. சிலர் கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசியதால் வன்முறையாக மாறியது. கூட்டத்தை அடக்க அதிகாரிகள் பெப்பர் ஸ்பிரே, ரப்பர் தோட்டாக்கள் மற்றும் புகை குண்டுகளைப் பயன்படுத்தினர்.
ஆனால் பாரமவுண்டில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் தவறான தகவல்களால் உருவானதாகத் தெரிகிறது.
அப்பகுதியில் உள்ள பிற இடங்களில் பல்வேறு குடியேறிகள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தாலும், அந்த வன்பொருள் கடையில் சோதனை நடந்ததாக பரவிய செய்தி உண்மையல்ல என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) விளக்கியது.
“தவறான தகவல்கள் இருந்தபோதிலும், லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள ஒரு ஹோம் டிப்போவில் குடியேற்ற மற்றும் சுங்கப் பாதுகாப்புத் துறையின் (ICE) ‘ரெய்டு’ எதுவும் நடக்கவில்லை,” என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

“உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. எல்லோரும் பயப்படுகிறார்கள்” என தனது இரண்டு நண்பர்களுடன் ஒரு சிறிய டொயோட்டா பிக்அப் டிரக்கின் உள்ளே சாய்ந்தபடி, ஜுவான் கூறினார்.
பாரமவுண்டில் ஒரு கார் தீக்கிரையாக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்பட்ட போது ஏற்பட்ட பரபரப்பான சூழல், லாஸ் ஏஞ்சலிஸ் முழுவதும் கலவரங்கள் பரவுவதற்கு காரணமானது என்று பெடரல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சனிக்கிழமை, அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கலிபோர்னியா தேசிய காவல்படையை அழைத்தார். இது வழக்கமாக மாநில ஆளுநரால் முடிவு செய்யப்படும் ஒன்று. அந்த நேரம், நகரத்தில் இரண்டாவது நாளாக போராட்டங்கள் தீவிரமாக நடந்துகொண்டிருந்தன.
மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் போராட்டங்கள் வெடித்ததால், அந்த வன்பொருள் கடைக்கு எதிரே உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட வணிகப் பூங்காவை தேசிய காவல்படை வீரர்கள் பாதுகாத்தனர்.
அந்த பகுதியில், ஹம்வீ வாகனங்களை (ராணுவ பாணியிலான) நிறுத்தி, போராட்டக்காரர்களை நேரடியாக எதிர்கொண்டது தேசிய காவல்படை. மோதலின் போது மெக்சிகன் கொடிகள் மற்றும் பதாகைகளை அசைத்து போராட்டக்கார்கள் கூச்சலிட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
“உங்களுக்கு இங்கே வரவேற்பு இல்லை!’ என்று லாஸ் ஏஞ்சலிஸ் அணியின் தொப்பி அணிந்த ஒருவர் வீரர்களை நோக்கி கத்தினார். அதே நேரத்தில், மற்றொரு போராட்டக்காரர் ஸ்ப்ரே பெயிண்டால் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறையை பற்றி ஆபாசமாக எழுதினார்.
பாதுகாக்கப்பட்ட அந்தப் பகுதியில் தங்களுடைய அலுவலகங்களில் ஒன்று உள்ளது. அதிகாரிகள் அதை “செயல்பாட்டுத் தளமாகப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், அந்த பகுதியை போராட்டக்காரர்கள் கண்டுபிடித்துள்ளனர்” என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
இந்த வாரம் லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் 118 சட்டவிரோத குடியேறிகளை கைது செய்துள்ளதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
இந்த குடியேறிகளில் சிலர் மீது போதைப்பொருள் கடத்தல், தாக்குதல் மற்றும் கொள்ளை போன்ற முந்தைய குற்றச்சாட்டுகள் இருந்ததாகவும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை குறிப்பிட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சலிஸில் “வன்முறையாளர்கள்” சிலர் உள்ளனர், அவர்கள் தப்பிக்க முடியாது என்று, ஞாயிற்றுக்கிழமை நியூ ஜெர்சியின் மோரிஸ்டவுனில் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறத் தயாராகும் போது, அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
முந்தைய இரவில் தனது நகரத்தை மாற்றிய அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை நம்ப முடியாமல், டோரா சான்செஸ் குழம்பி இருந்தார்.
ஞாயிற்றுக்கிழமையன்று அந்தப் பகுதியைச் சேர்ந்த மற்றவர்களுடன் இணைந்து ‘சேப்பல் ஆஃப் சேஞ்ச்’ தேவாலயத்தில் அவர் கூடியிருந்தார். அந்த தேவாலயம் முந்தைய நாள் நடந்த போராட்டம் நடந்த இடத்துக்கு வெகு அருகில் இருந்தது.
இந்த ஹிஸ்பானிக் சமூகம் பல ஆண்டுகளாக எப்படி புத்துயிர் பெற்று, அண்டை வீட்டார்கள் ஒருவரையொருவர் அறிந்து கவனித்துக் கொள்ளும் நெருக்கமான சமூகமாக மாறியது என்பது குறித்து, டோராவும் தேவாலயத்தில் இருந்த மற்றவர்களும் பேசிக்கொண்டிருந்தனர்.
“இந்தப் போராட்டங்கள் புலம்பெயர்ந்த சமூகத்துக்கு திருப்புமுனையாக இருந்தது,” என்று டோரா குறிப்பிட்டார்.
சிறுபான்மை குழுக்களைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி லாஸ் ஏஞ்சல்ஸில்.
வேறு எந்த இனக்குழுவையும் விட ஹிஸ்பானியர்கள் லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்தின் மக்கள்தொகையில் பெரும் பங்கைக் கொண்டுள்ளனர். குறிப்பாக மெக்சிகோவில் இருந்து வந்த குடியேறிகள், இங்குள்ள வரலாறு மற்றும் கலாசாரத்தின் முக்கிய பகுதியாக உள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்த நகரம் “புகலிட நகரம்” என்ற அந்தஸ்தைக் கொண்டுள்ளது. அதாவது, குடியேற்றம் குறித்த அமெரிக்க பெடரல் அரசின் நடவடிக்கைகளுடன் (federal immigration enforcement) இந்த நகர நிர்வாகம் ஒத்துழைக்காது.
பல நாட்களாகக் கொந்தளித்துக் கொண்டிருந்த பதற்றம், லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள ஆவணமற்ற குடியேறிகளை டிரம்ப் நிர்வாகம் குறிவைத்தபோது வெடித்தது போல தோன்றியதாக அங்குள்ள சிலர் கூறினர்.
“எழுந்து நிற்க வேண்டிய நேரம் இது”, “இவர்கள் என் மக்கள்”என்று பாரமவுண்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மரியா குட்டியர்ரெஸ் கூறினார்.
மரியா மெக்சிகோவில் பிறந்ததாகவும், ஆனால் சிறுமியாக இருந்ததிலிருந்து இங்கு வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இங்குள்ள பலரைப் போலவே, அவரும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் இருப்பதாகக் கூறுகிறார்.
“இது லாஸ் ஏஞ்சலிஸ்”, என்று கூறிய மரியா, “இது நம் அனைவரையும் பாதிக்கிறது.”,
“இங்கே, ஏறக்குறைய அனைவருக்கும் குடும்பம் இருக்கிறது, அல்லது அவர்கள் ஆவணமில்லாத ஒருவரை அறிந்திருக்கிறார்கள்,” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU