SOURCE :- BBC NEWS

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகுகளை கடலில் மூழ்கடிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுத்து வருகின்றது.
அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 123ற்கும் அதிகமான படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகம் மற்றும் மன்னார் பகுதிகளில் இந்த படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

படகுகளின் தற்போதைய நிலைமை
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கைகளின் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைப்பற்றப்பட்ட படகுகள் இருவேறு பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
மயிலிட்டி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகள் அனைத்தும் சேதமாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
சில படகுகள் நீருக்குள் மூழ்கியுள்ளதுடன், பல படகுகள் உடைந்து காணப்படுவதாகயும் அவதானிக்க முடிந்தது.
இந்திய படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் உள்ளுர் மீனவர்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டு வருவதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையில், குறித்த படகுகளை கடலில் மூழ்கடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குறிப்பிடுகின்றார்.
இந்தியாவில் இந்த படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமையினால், இந்த படகுகளை உள்ளுர் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியாது என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அத்துடன், அரசுடமையாக்கப்பட்டுள்ள இந்த படகுகளை உரிமையாளர்களிடம் கையளிக்க முடியாது என கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவிக்கின்றார்.

இலங்கை அரசாங்கம் என்ன கூறுகின்றது?
இந்திய படகுகளை கடலில் மூழ்கடிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவிக்கின்றார்.
படகுகளை ஆழ்கடலுக்கு இழுத்து செல்வதற்கான தயார்ப்படுத்தல்களை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
”இலங்கை கடற்பரப்பில் மீன் வளங்கள் குறைவடைந்து வருகின்றன. இந்த படகுகளை நீரில் மூழ்கடிப்பதன் ஊடாக மீன் வளங்கள் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது. அதேநேரம், இந்திய படகுகளின் வருகையை தடுத்து நிறுத்துவதற்கான சந்தர்ப்பமாகவும் இது அமையும்.” என கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குறிப்பிடுகின்றார்.
இந்த விடயம் தொடர்பாக கொழும்பிற்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் வினவிய போதிலும், இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடமிருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.

‘இந்திய படகுகளின் வருகை குறைந்துள்ளது’
இந்திய அரசாங்கத்தினால் மீன்பிடி தடை காலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மீனவர்களின் வருகை இல்லாமை காரணமாக தாம் மிகுந்த மகிழ்ச்சியுடன் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாணம் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
”இந்திய அரசாங்கத்தினால் தடை காலம் அறிவிக்கப்படும் போது அதனை கடமை பிடிக்கும் இந்திய மீனவர்கள், ஏனைய காலத்திலும் கடமை பிடிக்கும் வகையில் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என யாழ்ப்பாணம் மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
”இரண்டு மாத கால தடை அறிவிக்கப்பட்டுள்ளமையினால், எங்களுடைய தொழிலாளர்கள் மிக சந்தோசமாக எங்கேயும் சென்று தொழில் செய்யக்கூடிய வகையில் இருக்கின்றது. இந்திய படகுகள் வந்தால் எமது வாழ்க்கை இல்லாது போகின்றது. இந்த இரண்டு மாத காலம் இந்திய படகுகள் வரவில்லை. எமது குடும்பத்தோடு நாங்கள் மிகுந்த சந்தோசமாக இருக்கின்றோம்” என யாழ்ப்பாணத்தில் மீனவ தொழிலில் ஈடுபடும் லோகநாதன் தெரிவிக்கின்றார்.

தமிழக மீனவர்கள் கூறுவது என்ன?
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமேஸ்வரம் அனைத்து விசைப்பலகை மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜா,” இலங்கை இந்திய மீனவர் பிரச்னை கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து இருந்து வருகிறது. இரு நாட்டு மீனவர் பிரச்னையில் தமிழக மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.” என்கிறார்.
”தமிழக மீன்பிடி படகுகள் ஒவ்வொன்றும் ரூ.10 லட்சம் தொடங்கி அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் மதிப்பிலானது. தமிழக படகுகளை மூழ்கடிக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த இலங்கை அரசிடம் இந்திய அரசு பேசும் என நாங்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் சந்திரசேகர் தமிழக மீன்பிடி படகுகள் கடலில் நிச்சயம் மூழ்கடும் என தெரிவித்திருந்தார்.
இலங்கை அரசு அவர்களின் நிலைப்பாட்டில் திட்டவட்டமாக இருப்பதால் அரசுடமையாக்கப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான படகு ஒரு நாள் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த தங்கச்சிமடம், பாம்பன், ராமேஸ்வரம் பகுதிகளில் மீனவர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இலங்கை இந்திய மீனவர்களிடையே பல ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ள இருநாட்டு மீனவர் பேச்சு வார்த்தையை துரிதப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தி ஒரு உரிய தீர்வு எட்டும் வரை தமிழக மீனவர்கள் மிதான கைது நடவடிக்கையை இலங்கை அரசு நிறுத்தி படகுகளை கடலில் மூழ்கடிக்கும் திட்டத்தை கை விட வேண்டும்.” என்றார் ஜேசுராஜா
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU