SOURCE :- BBC NEWS

ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் - நிபுணர்கள் விளக்கம்

பட மூலாதாரம், Getty Images

12 ஜூன் 2025, 14:34 GMT

புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்

ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று கிளம்பிய சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது.

மேகானி நகரில் ஒரு மருத்துவர்கள் விடுதியின் மீது விழுந்து நொறுங்கிய இந்த விமானம் விபத்துக்கு உள்ளானதற்கு “மனிதப் பிழை” காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் காவல்துறை, தீயணைப்பு வீரர்கள் மற்றும் பிற மீட்புப் படையினர் உள்ளனர். மீட்புப் பணிகள் இன்னும் நடந்து வருகின்றன.

“ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டிய ஏர் இந்தியா AI 171 விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களிலேயே மதியம் 1:38 மணிக்கு குடியிருப்புப் பகுதியில் (மேகானி நகர்) மோதி விபத்துக்குள்ளானது.

விமானத்தில் 232 பயணிகள் இருந்தனர். அதில் பெரியவர்கள் 230 பேர், விமான பணியாளர்கள் 10 பேர், விமானிகள் இருவர் என மொத்தம் 242 பேர் இருந்தனர்” என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்தில் என்ன நடந்தது?

ஏர் இந்தியா விமான விபத்து, குஜராத், ஆமதாபாத்

பட மூலாதாரம், Getty Images

விமானம் விபத்துக்குள்ளானபோது வானிலை தெளிவாக இருந்ததாக விமானப் பாதுகாப்பு நிபுணர் மார்கோ சான் கூறுகிறார்.

METAR என்றழைக்கப்படும் விமான வானிலை முன்னறிவிப்பின்படி, அந்தப் பகுதியில் மேற்பரப்பு காற்று குறைவாகவும், தெரிவுநிலை (Visiblity) ஆறு கிலோமீட்டர் தூரம் என்ற அளவிலும் இருந்தது.

விமானக் கண்காணிப்பு தளமான ஃப்ளைட் ரேடார் 24-இன் (FlightRadar24) கூற்றுப்படி, விமானம் புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள், அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விமான கண்காணிப்பு தரவின்படி, விமானம் தரையில் இருந்து 425 அடி உயரத்தில் இருந்தபோது கிடைத்ததுதான் கடைசி சிக்னல். அந்த உயரத்தில், புறப்பட்ட ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் விமானம் சிக்னலை இழந்ததாக ஃப்ளைட் ரேடார் 24 தெரிவித்துள்ளது.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு, விமானி ‘மேடே அழைப்பு’ (உயிருக்கு ஆபத்தான அவசர நிலையைக் குறிக்கும் சொல்) விடுத்ததாக இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அதிகாரி தெரிவித்தார்.

அதன் பிறகு விமானியிடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. விமானம் மேகானி நகர் என்ற குடியிருப்புப் பகுதியில் விழுந்தது. அது மருத்துவர்கள் விடுதியின் மீது விழுந்து நொறுங்கியதாக போலீசார் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தனர்.

விமான விபத்திற்குக் காரணம் மனிதப் பிழையா?

ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து

விமானம் புறப்படும்போது அதன் இறக்கை மடிப்புகள் (Airplane wing flaps) ஒரு சிக்கலான நிலையில் இருந்திருக்கலாம் என்று விமான நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

பிபிசி சரிபார்த்த ஒரு காணொளியில் விமானம் கீழே இறங்குவதையும், அது தரையில் மோதும்போது ஒரு பெரிய வெடிப்பு ஏற்படுவதையும் காண முடிகிறது.

“இதைப் பார்க்கும்போது, இறங்கமைப்பு (Undercarriage) இன்னும் கீழே உள்ளது. ஆனால் மடிப்புகள் பின்வாங்கிய நிலையில் உள்ளன என்பது தெரிகிறது” என்று விமான ஆய்வாளர் ஜெஃப்ரி தாமஸ் கூறுகிறார்.

இதன் பொருள் மடிப்புகள் இறக்கையுடன் ஒன்றிப்போன நிலையில் இருந்துள்ளன, விமானம் புறப்பட்ட உடனேயே இவ்வாறு இருப்பது மிகவும் அசாதாரணமானது என்று அவர் கூறுகிறார்.

“இறங்கமைப்பு பொதுவாக 10-15 விநாடிகளுக்குள் பின்வாங்கப்படும். பின்னர் மடிப்புகள் 10-15 நிமிடங்களுக்குள் பின்வாங்கப்படும்,” என்று விளக்குகிறார் அவர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மற்றொரு நிபுணரான டெர்ரி டோசர், “ஆனால், காணொளியில் பார்த்து ‘மடிப்புகள் நீட்டிக்கப்பட்டிருப்பது போலத் தெரியவில்லை’ என்று உறுதியாகச் சொல்வது மிகவும் கடினம். ஒருவேளை அவ்வாறு இருந்திருந்தால், ஒரு விமானம் அதன் புறப்பாட்டுச் செயல்முறையை முழுமையாக முடிக்கவில்லை என்பதே அதன் அர்த்தம்” என்கிறார்.

“இறக்கையின் மடிப்புகள் சரியான நிலையில் இல்லையென்றால், அதற்கு மனிதப் பிழை ஒரு சாத்தியமான காரணமாக இருக்கும். ஆனால் அதை உறுதிப்படுத்தும் அளவுக்கு காணொளி தெளிவாகவும் தரமாகவும் இல்லை” என்று பக்கிங்ஹாம்ஷையர் நியூ பல்கலைக் கழகத்தின் முன்னாள் விமானியும் மூத்த விரிவுரையாளருமான மார்கோ சான் கூறுகிறார்.

போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம்

ஃபிளைட் ரேடார் 24-இன் கூற்றுப்படி, விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ஆகும். ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த விபத்தில்தான் போயிங் 787 விமானம் முதல் முறையாக விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்த மாடல் விமானம் 14 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் ஆறு வாரங்களுக்கு முன்புதான் விமானத் தயாரிப்பு நிறுவனம், டிரீம்லைனர் என்று அழைக்கப்படும் இந்த மாடல் ஒரு பில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்று ஒரு மைல்கல்லை எட்டியதாகத் தெரிவித்தது.

ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து

அந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், 1,175க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்ட உலகளாவிய 787 விமானக் குழு, 30 மில்லியனுக்கும் அதிகமான விமான நேரங்களை உள்ளடக்கிய கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் விமானங்களை இயக்கியுள்ளதாக நிறுவனம் கூறியது.

இந்த விபத்து, அதன் 737 திட்டங்களுடன், ஆபத்தான விபத்துகள் உள்படப் பல்வேறு சிக்கல்களைச் சமாளிக்கப் போராடி வரும் போயிங் நிறுவனத்திற்கு ஒரு பெரிய அடியாக விழுந்துள்ளது.

தனது பணியில் ஓர் ஆண்டு நிறைவைக் குறிக்கவுள்ள தலைமை நிர்வாக அதிகாரி கெல்லி ஆர்ட்பெக்கிற்கு இது மற்றொரு சோதனையாக இருக்கும்.

அமெரிக்க விமானத் தயாரிப்பாளரான இந்த நிறுவனத்தின் எதிர்காலம் குறித்துக் கேள்விகளை எழுப்பும் பல்வேறு பிரச்னைகளைத் தீர்த்து வைக்க அவர் இந்தப் பணியில் அமர்த்தப்பட்டார்.

ஏர் இந்தியா நிறுவனம், பயணிகள் தொடர்பான பிரத்யேக அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது. மேலும் தகவல் பெற விரும்பும் இந்திய குடும்பங்கள் 1800 5691 444 என்ற எண்ணை அழைக்கலாம்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC