SOURCE :- BBC NEWS

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

காஷ்மீர் பிரச்னை குறித்து, பாகிஸ்தானுடன் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்வதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் கூறியதாக இந்தியாவின் மூத்த தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

செவ்வாயன்று இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலில், இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை, பிரதமர் மோதி மிக “வலுவாக” டிரம்பிடம் தெரிவித்ததாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.

கடந்த மே மாதம் அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளான இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நான்கு நாள் மோதல் ஏற்பட்டதிலிருந்து, “காஷ்மீர் பிரச்னையை” தீர்க்க இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய டிரம்ப் பலமுறை முன்வந்துள்ளார்.

இந்தியாவின் அறிக்கை குறித்து வெள்ளை மாளிகை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

மோதல் நடந்த சமயத்தில் , “இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் பற்றியோ, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்வது பற்றியோ எந்த நிலையிலும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை” என்று, மோதி டிரம்பிடம் “தெளிவாக” கூறியதாகவும் மிஸ்ரி குறிப்பிட்டார்.

அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த சண்டை நிறுத்தத்திற்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலை முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும், அவர்களை உடன்பட வைக்க வர்த்தகத்தை ஒரு ஊன்றுகோலாகப் பயன்படுத்தியதாகவும் டிரம்ப் பலமுறை கூறியுள்ளார்.

சண்டை நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்கா கூறும் கருத்துக்களை பாகிஸ்தான் ஆதரித்தது, ஆனால் இந்தியா அதனை மறுத்துள்ளது.

“ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள், இரு நாட்டு ராணுவங்களுக்கும் இடையே ஏற்கனவே நிறுவப்பட்ட வழிகளின் மூலம் நேரடியாக நடத்தப்பட்டன,” என்று கூறினார் மிஸ்ரி .

‘வாருங்கள், நாங்கள் உங்களுடன் (இந்தியாவுடனும், பாகிஸ்தானுடனும்) நிறைய வர்த்தகம் செய்யப்போகிறோம். அதனால் இதை நிறுத்துங்கள். நீங்கள் நிறுத்தினால் நாங்கள் வர்த்தகம் செய்யத் தயாராக இருக்கிறோம். நிறுத்தவில்லை என்றால், எந்த வர்த்தகமும் நடைபெறாது.'”என்று இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் தான் பேசியதாக கடந்த மாதம், டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஜூலை 9ஆம் தேதிக்கு முன், அதிகப்படியான வரிகள் மீதான 90 நாள் இடைநிறுத்தம் முடிவடைவதற்கு முன்பு, டிரம்ப் நிர்வாகத்துடன் விரைவாக ஒரு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியா முயற்சித்து வருகிறது.

காஷ்மீர் என்பது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒரு சர்ச்சைக்குரிய பிரச்னை.

காஷ்மீரை அதன் பிரதேசத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகக் கருதும் இந்தியா, எந்தவொரு பேச்சுவார்த்தையையும், குறிப்பாக மூன்றாம் தரப்பு மூலம் நடைபெறும் பேச்சுவார்த்தையை நிராகரிக்கிறது.

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்காக பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்டியது. இதைத் தொடர்ந்து இந்தியா–பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்தது. ஆனால் பாகிஸ்தான் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தது.

அதன் பின்னர் மே மாதத்தில், பாகிஸ்தானில் உள்ள ‘பயங்கரவாத உள்கட்டமைப்பு’ என்று அழைக்கப்பட்ட இடத்தின் மீது இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதன் விளைவாக, எல்லையின் இரு பக்கங்களில் இருந்தும் நான்கு நாட்கள் தீவிர ராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இரு நாடுகளும் விமானப்படை தளங்கள் மற்றும் பிற ராணுவ தளங்களை குறிவைத்ததாக ஒன்றையொன்று குற்றம் சாட்டின.

இரண்டு அணு ஆயுத நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் மேலும் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்ட நிலையில், அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இரு நாடுகளும் “முழுமையான மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்திற்கு” ஒப்புக்கொண்டதாக மே 10 அன்று டிரம்ப் அறிவித்தார்.

பின்னர், ட்ரூத் சோஷியல் என்ற சமூக ஊடகத்தில் டிரம்ப் ஒரு பதிவிட்டார்.

அதில், “ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்குமா என்பதைப் பார்க்க, உங்கள் இருவருடனும் (இந்தியா மற்றும் பாகிஸ்தான்) நான் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்று கூறியிருந்தார். (காஷ்மீர் பிரச்னை 1947ஆம் ஆண்டில் தொடங்கியது)

அதே நாளில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்ட அறிக்கையில், இரு நாடுகளும் “நடுநிலையான இடத்தில் பல பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தைகளைத் தொடங்க” ஒப்புக் கொண்டதாகக் கூறப்பட்டது.

மே 11 அன்று, “தற்போதைய மோதலை நிறுத்த வேண்டிய நேரம் இது” என்பதை புரிந்துகொண்டதற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களை டிரம்ப் மீண்டும் பாராட்டினார். மேலும், “இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் தைரியமான முடிவை அடைய அமெரிக்காவால் உங்களுக்கு உதவ முடிந்தது”குறித்து பெருமைப்படுவதாகவும் அவர் கூறினார்

சண்டை நிறுத்தம் குறித்த டிரம்பின் அறிக்கைக்குப் பிறகு, இரு நாடுகளாலும் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகக் கூறிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர், மேலும் “மூன்று டஜன் நாடுகள்” (முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகள்) ராஜீய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

இருப்பினும், அமெரிக்காவின் எந்தவொரு தலையீட்டையும் இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதற்கான சலுகைகள் குறித்து டிரம்ப் வெளிப்படையாக கூறிய கருத்துகள், இந்த விவகாரத்தில் இந்தியா வகுத்துள்ள கடுமையான எல்லைகளைச் சோதித்ததாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவையும் பாகிஸ்தானையும் சமமாக நடத்த வேண்டாம் என்று இந்தியா எப்போதும் தனது மேற்கத்திய கூட்டாளிகளை ஊக்குவித்து வருகிறது. மேலும், மேற்கத்திய தலைவர்கள் ஒரே நேரத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் பயணம் செய்வதையும் எதிர்க்கிறது.

ஆனால் டிரம்பின் ட்வீட்கள் பெரும்பாலும் இந்தியாவையும் பாகிஸ்தானையும் சமமாகக் காட்டுகின்றன. இது இந்தியாவின் ராஜீய வட்டாரங்களில் சில அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் இது அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடந்து வரும் வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளைப் பாதிக்குமா என்பதை இப்போதே தீர்மானிப்பது மிக விரைவானதாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU