SOURCE :- BBC NEWS

பன்றி, பலியிடுதல், சர்ச்சை, வேலூர், கோயில் திருவிழா, மசூதி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கோவில் திருவிழாவில் பன்றியை பலியிட அதே பகுதியில் அமைந்துள்ள மசூதி நிர்வாகத்தினர் ஆட்சேபனை தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது.

“கோவில் வழிபாடு நடத்துவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆர்.டி.ஓ நடத்திய பேச்சுவார்த்தையில், திருவிழாவில் ஆடு, கோழி பலியிட்டு அன்னதானம் செய்வதாகக் கூறினர். மாறாக, மசூதி அருகில் பன்றியை பலியிட முயற்சி செய்தனர். இது தான் பிரச்னைக்கு காரணம்” என்கிறார் குடியாத்தம் ஜிட்டப்பள்ளி பள்ளிவாசல் நிர்வாகி சாதிக் பாட்ஷா.

ஆனால், பாரம்பரியமாக உள்ள தங்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் வகையில் மசூதி நிர்வாகத்தினர் செயல்படுவதாகக் கூறுகின்றனர் கோவில் நிர்வாகத்தினர்.

வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் கூறுவது என்ன?

“கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு”

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவில் சேம்பள்ளியை அடுத்துள்ள ஜிட்டப்பள்ளி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வசிக்கின்றனர். ஊரின் நடுவில் உள்ள அரச மரத்தடியில் சிறிய அளவிலான காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

கடந்த மே 28 முதல் ஜூன் 1 வரை இங்குள்ள காளியம்மன் கோவிலில் திருவிழாவை நடத்துவது என கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

பன்றி, பலியிடுதல், சர்ச்சை, வேலூர், கோயில் திருவிழா, மசூதி

முன்னதாக, கோவிலுக்குச் சுற்றுச்சுவர் எழுப்பி மேம்படுத்தி கட்டும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டனர். “கட்டடம் கட்டுவதற்கு கோவிலுக்கு அருகில் உள்ள மசூதி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்” எனக் கூறுகிறார், காளியம்மன் கோவில் நிர்வாகி பச்சைத் தமிழன்.

கோவிலைச் சுற்றியுள்ள சுமார் 12 சென்ட் நிலத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடந்துள்ளன. இங்கிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் மக்கா மஜீத் பள்ளிவாசல் உள்ளது.

“கோவில் அமைந்துள்ள இடம் நத்தம் புறம்போக்கு என்பதால் 1998 ஆம் ஆண்டிலேயே வருவாய்த்துறையிடம் கோவில் கட்டுவதற்கு அனுமதி வாங்கிவிட்டோம். முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கோவிலைப் புதுப்பிக்கும் பணிகளைத் தொடங்க முடியவில்லை” எனக் கூறுகிறார் காளியம்மன் கோயில் நிர்வாகியான பச்சைத் தமிழன். அனுமதி வாங்கியதற்கான எழுத்துப்பூர்வ ஆதாரம் உள்ளதா என்று பிபிசி தமிழ் சார்பில் கேட்ட போது, அவ்வாறு எந்த ஆவணத்தையும் அவர் காட்டவில்லை.

இதற்கிடையில், கோவில் திருவிழா பணிகளும் தொடங்கியுள்ளன. ‘125 ஆம் ஆண்டு காளியம்மன் கோவில் திருவிழா’ என அழைப்பிதழை அச்சிட்டு விழா ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

“பன்றியை பலியிட எதிர்ப்பு காட்டினர்”

பன்றி, பலியிடுதல், சர்ச்சை, வேலூர், கோயில் திருவிழா, மசூதி

‘திருவிழாவில் பிரச்னை வரலாம்’ எனக் கருதி கடந்த மே 27 அன்று குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

“மூன்று முறை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ‘திருவிழாவை நல்லபடியாக நடத்துங்கள். முஸ்லிம்களுக்கு எந்த இடையூறும் செய்யக் கூடாது’ என அதிகாரிகள் எழுதி வாங்கினர்” எனக் கூறுகிறார் பச்சைத் தமிழன்.

காளியம்மன் திருவிழாவுடன் தங்களின் குலதெய்வமான முனீஸ்வரனுக்கு முப்பூஜை நடத்தும் வழக்கம் உள்ளதாகக் கூறும் பச்சைத் தமிழன், “முப்பூஜை என்றால் கோழி, ஆடு, பன்றி ஆகியவற்றை பலியிடுவது ஆகும். பன்றியை படையல் இடுவது இங்குள்ள மக்களின் வழக்கங்களில் ஒன்று” எனக் கூறுகிறார்.

“அருகில் மசூதி இருப்பதால் கடந்த ஆண்டு வரை அவர்கள் மனம் புண்படக் கூடாது என்பதற்காக அவர்கள் கண்ணில் படாத வகையில் ஊருக்கு வெளியே உள்ள முனீஸ்வரன் கோவில் அருகில் பன்றியை பலியிட்டு இங்கே கொண்டு வந்து பூஜை செய்வோம். ஆனால், இந்த ஆண்டு கோவிலில் பணிகளை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) இங்கேயே பன்றியை பலியிடுவது என முடிவு செய்தோம்” எனக் கூறுகிறார், ஜிட்டப்பள்ளியை சேர்ந்த கற்பகம்.

இதனையறிந்த மசூதி நிர்வாகிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். குடியாத்தம் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கவே, துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான போலீஸார், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

“எங்களால் பன்றியை பலியிட முடியவில்லை. கடந்த சில நாட்களாக சாலையில் நின்று கூட எங்களால் பேச முடியவில்லை” எனக் கூறுகிறார், கற்பகம்.

இதுதொடர்பாக ஊர் மக்களில் சிலர் எடுத்த வீடியோ காட்சிகளை பிபிசி தமிழ் சரிபார்த்தது. பன்றியை பலியிடுவதற்கு மக்கள் முயற்சிப்பதைக் கண்ட காவல்துறை அதனைத் தடுத்துள்ளது. பெண் காவலர்களை வரவழைத்து அங்கிருந்து பெண்களை வெளியேற்றுவதைப் பார்க்க முடிந்தது.

பன்றி, பலியிடுதல், சர்ச்சை, வேலூர், கோயில் திருவிழா, மசூதி

6 பேர் மீது வழக்குப்பதிவு

“கோவில் திருவிழாவுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காகத்தான் காவல்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக நான் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், மசூதி நிர்வாகத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” எனக் கூறுகிறார் பச்சைத் தமிழன்.

இந்த வழக்கில் குடியாத்தம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட பச்சைத் தமிழனுக்கு, கடந்த வியாழக்கிழமையன்று குடியாத்தம் நடுவர் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்துள்ளது.

பள்ளிவாசல் நிர்வாகி கூறுவது என்ன?

பன்றி, பலியிடுதல், சர்ச்சை, வேலூர், கோயில் திருவிழா, மசூதி

கிராம மக்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறார், மக்கா மஜித் ஜிட்டப்பள்ளி மசூதியின் பொறுப்பாளர் சாதிக் பாட்ஷா.

சுமார் 90 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் தங்களின் மசூதி உள்ளதாகக் கூறும் அவர், “கோயிலில் சாமி கும்பிடுவதற்கு நாங்கள் இடையூறு செய்யவில்லை. கோயிலுக்கு அருகே உள்ள பொது கிணற்றையும் சுற்றி சுவர் எழுப்ப திட்டமிட்டதால்தான் நாங்கள் எதிர்த்தோம்” எனக் கூறுகிறார்.

இது தொடர்பாக மசூதி தரப்பில் வருவாய்த்துறைக்கு புகார் கடிதம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. “வட்டாட்சியரும் நேரில் ஆய்வு செய்து அதனை உறுதி செய்து சுற்றுச்சுவர் கட்டுவதற்கு அனுமதி அளிக்க முடியாது எனக் கூறிவிட்டார். இதனால் எங்கள் மீது அவர்களுக்கு கோபம் ஏற்பட்டது” எனக் கூறுகிறார், சாதிக் பாட்ஷா.

“புதிதாக புகுத்த நினைக்கின்றனர்”

பன்றி, பலியிடுதல், சர்ச்சை, வேலூர், கோயில் திருவிழா, மசூதி

“விழாவில், ஆடு, கோழியை வெட்டுங்கள், பன்றியை வெட்ட வேண்டாம் என்றோம். ஆனால், அவர்கள் புதிதாக அதனை இங்கேயே செய்ய முயற்சிக்கின்றனர். அதுதான் பிரச்னைக்குக் காரணம்” எனக் கூறுகிறார் சாதிக் பாட்ஷா.

“ஊர் மக்களில் சிலர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்ததற்கும் மசூதி நிர்வாகத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை” என்று சாதிக் பாட்ஷா கூறினார்.

வருவாய் கோட்டாட்சியர் சொல்வது என்ன?

கிராம மக்களின் குற்றச்சாட்டு குறித்து குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமியிடம் பிபிசி தமிழ் பேசியது.

“ஊரில் பாரம்பரியப்படி என்ன நடைமுறை இருந்ததோ அதைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறியுள்ளோம். இவ்வளவு காலமாக அமைதியாக திருவிழா கொண்டாடினர். புதிய வழக்கத்தைக் கொண்டு வரவேண்டாம் எனக் கூறியுள்ளோம்” என்கிறார்.

கிராம மக்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறித்துக் கேட்டபோது, “சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது கிராமத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை” எனத் தெரிவித்தார்.

“கோவில் அமைந்துள்ள இடம், அரசு புறம்போக்கு நிலமாக உள்ளது. முறையாக அனுமதி வாங்கிவிட்டு அங்கே கோவிலைக் கட்டுமாறு கூறியுள்ளோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிபிசி தமிழ், வாட்ஸ்ஆப்

‘திட்டத்தை மாற்றியதால் பிரச்னை’ – குடியாத்தம் டி.எஸ்.பி

பன்றி, பலியிடுதல், சர்ச்சை, வேலூர், கோயில் திருவிழா, மசூதி

“கடந்த ஆண்டு நடந்த திருவிழாவில் கிராம மக்கள் பன்றியை இங்கே வெட்டவில்லை. அதையே இந்த ஆண்டும் கடைபிடிக்குமாறு கூறினோம். அதை அவர்களும் ஏற்றுக் கொண்டனர். ஆனால், மறுநாள் தங்களின் திட்டத்தை மாற்றியதால் பிரச்னை ஏற்பட்டது” எனக் கூறுகிறார், குடியாத்தம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது, அவதூறாகப் பேசியது ஆகியவை காரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU