SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், WWW.MFA.GOV.CN
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் தனது சீனப் பயணத்தை முடித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோரை இஷாக் தார் புதன்கிழமையன்று பீஜிங்கில் சந்தித்தார்.
அதனையடுத்து, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை (CPEC) ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க மூன்று நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் , “சீனாவும் பாகிஸ்தானும் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி (BRI) ஒத்துழைப்பின் பரந்த கட்டமைப்பின் கீழ் ஆப்கானிஸ்தானுக்கு சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை (CPEC) விரிவுபடுத்துவதற்கு ஆதரவளித்துள்ளன.
மேலும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் தேசிய மரியாதையைப் பாதுகாப்பதற்கும் சீனா ஆதரவளித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் வழியாக சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) செல்வதால், இந்தியா அதை விமர்சித்து வருகிறது.
சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி’ திட்டத்தின் ஒரு பகுதி தான் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் என்பதால், இந்தியாவும் அதை எதிர்க்கிறது.
இந்த முத்தரப்பு சந்திப்பு, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமீர் கான் முத்தகியுடன் பேச்சுவார்த்தை நடத்திய சில நாட்களுக்குப் பிறகு நடந்தது. ஆனால், இந்தியா இன்னும் தாலிபன் அரசாங்கத்தை அங்கீகரிக்கவில்லை.
வியாழக்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம் இது குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
“சில அறிக்கைகளைப் பார்த்தோம். இதைத் தவிர இதைப் பற்றி நாங்கள் வேறு எதுவும் சொல்ல முடியாது” என்று ஜெய்ஸ்வால் அதற்கு பதில் அளித்தார்.

இந்தியாவின் கவலைகள் அதிகரிக்குமா?

பட மூலாதாரம், Getty Images
பீஜிங்கில் நடைபெற்ற இந்த சந்திப்பை ‘முறைசாரா’ சந்திப்பு என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் வர்ணித்துள்ளார்.
சீனா வெளியிட்ட அறிக்கையில், “ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் ராஜ்ஜீய உறவுகளை மேம்படுத்துவதற்கான தெளிவான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளன.
இரு நாடுகளும் விரைவில் தூதர்களைப் பரிமாறிக்கொள்வது குறித்து கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு சீனாவும் பாகிஸ்தானும் ஆதரவளிக்கின்றன.
2021 ஆம் ஆண்டு தாலிபன் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, அதனுடன் ராஜ்ஜீய உறவுகளைப் பேணிய முதல் நாடுகளில் சீனாவும் ஒன்று.
இந்த சந்திப்பு இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் ராஜ்ஜீய உத்தியாகவும், பிராந்திய ஆதரவைப் பெறும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
பிராந்தியத்திலிருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும், பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும் அனைத்துத் தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளதாக, பாகிஸ்தான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கும் தாலிபன் ஆட்சிக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த சீனா உதவி செய்கிறது எனவும், இது இந்தியாவின் கவலைகளை நிச்சயமாக அதிகரிக்கும் என்றும் புது டெல்லியைச் சேர்ந்த சுயாதீன ஆராய்ச்சியாளரும் வெளியுறவு விஷயங்களில் நிபுணருமான ருஷாலி சஹா கருதுகிறார்.
“சமீபத்தில், தாலிபன்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான முக்கியப் பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பரில் ஆப்கானிஸ்தான் அகதிகள் பெருமளவில் நாடு கடத்தப்பட்டதாலும், எல்லை தாண்டிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ராணுவ மோதல்களாலும் இரு நாட்டு உறவுகளில் ஏற்பட்டிருந்த பதற்றம் மெல்லக் குறைந்து, மீண்டும் நெருக்கம் வளரத் தொடங்குவதற்கான அறிகுறி இது.
பாகிஸ்தானுக்கும் தாலிபன்களுக்கும் இடையிலான உறவுகளை சீனா எளிதாக்குகிறது.
இது வளர்ந்து வரும் சீனா – பாகிஸ்தான் – தாலிபன் கூட்டணியைக் குறிக்கிறது. இது இந்தியாவில் கவலைகளை எழுப்புவது உறுதி” என்று ருஷாலி சஹா தி டிப்ளமட் இதழில் எழுதியுள்ளார்.
இந்தியா இப்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பேராசிரியர் ஹர்ஷ் வி பந்த் மற்றும் சிவம் ஷெகாவத் ஆகியோர் என்டிடிவிக்காக எழுதிய ஒரு கட்டுரையில் கூறுகிறார்கள்.
“அறிக்கைகளில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார உறுதிமொழிகள் நடைமுறையில் உருவாக்கப்பட இன்னும் நீண்ட காலம் உள்ளது.
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் (CPEC) இதுவரை எந்தவிதமான முன்னேற்றமும் கிடையாது, மேலும் விரைவாக அது நடைபெறுவதற்கும் வாய்ப்பு இல்லை.
ஆனால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் மீண்டும் தனது பிரதேசத்தில் சேர்க்க சீனா முயற்சிப்பது இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் வெளியிட்ட அறிக்கையில் ‘பயங்கரவாதம் ‘ என்ற சொல் குறிப்பிடப்படவில்லை .
அதே சமயம், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் முடிவுக்கு வருமா?
2021ம் ஆண்டில் தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் பதற்றமடைந்துள்ளன.
அந்த நேரத்தில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தது குறித்து, “அடிமைத்தனத்தின் சங்கிலிகளை ஆப்கானிஸ்தான் உடைத்துவிட்டது” என்று கூறினார்.
ஆனால், பயங்கரவாதத் தாக்குதல்களின் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தன.
பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் எல்லை மீறல்களில் ஈடுபட்டதாக தாலிபன் நிர்வாகம் குற்றம் சாட்டுகிறது.
தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) என்ற தீவிரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானின் நிலத்தை தங்கள் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது. இதைத் தடுக்க தலிபான் அரசு முறையாக நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும் பாகிஸ்தான் கூறுகிறது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை தாலிபான் அரசாங்கம் மறுக்கிறது.
முன்னதாக டிசம்பர் 2024ம் ஆண்டில், கிழக்கு ஆப்கானிஸ்தானில், வான்வழித் தாக்குதல்களை நடத்தியது பாகிஸ்தான் .
தாலிபன் அரசாங்கத்தின் கூற்றுப்படி, இந்த தாக்குதல்களில் பல பேர் கொல்லப்பட்டனர்.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்தது.
இந்தத் தாக்குதல் நடந்த சில வாரங்களுக்குப் பிறகு, இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, முத்தகியுடன் பேச்சுவார்த்தை நடத்த துபை வந்தார்.
பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக மில்லியன் கணக்கான ஆப்கானிய அகதிகள் வசித்து வருகின்றனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்துக்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது.
பாகிஸ்தான் கடந்த காலங்களில் பலமுறை அகதிகளை திருப்பி அனுப்ப முயற்சித்துள்ளது.
ஆனால், இப்போது பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான் அகதிகளை திருப்பி அனுப்புவதும் வெளியேற்றுவதும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையின்படி, “2023 ஆம் ஆண்டு அகதிகளை திருப்பி அனுப்பும் செயல்முறை தொடங்கியதிலிருந்து, மொத்தம் 9 லட்சத்து 17 ஆயிரத்து 189 ஆப்கானிய குடிமக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறி தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளனர்.
2025ம் ஆண்டு ஏப்ரல் 6-12ம் தேதிக்கு இடையில், மொத்தம் 55 ஆயிரத்து 426 ஆப்கானிய குடிமக்கள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளனர் அல்லது வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கை என்பது, ஒவ்வொரு நாளும் சராசரியாக 5,200 பேர் திரும்பி வருவதைக் குறிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் குடும்பங்களுக்கு இந்திய அரசாங்கம் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளதாக தாலிபன் அகதிகள் அமைச்சகம் அறிவித்திருந்தது.
தெற்காசியாவில் மாறிவரும் சமன்பாடுகளுக்கு மத்தியில் தாலிபனும் பாகிஸ்தானும் நெருங்கி வர முடியுமா என்ற கேள்விக்கு சர்வதேச உறவுகளில் நிபுணராக உள்ள ஸ்வஸ்தி ராவ் பதிலளித்தார்.
“பாகிஸ்தானும் தாலிபனும் நெருங்கி வரவில்லை, இவை அனைத்தும் சீனாவின் தலைமையின் கீழ் நடக்கிறது. இந்த நாடுகளில் தனது பொருளாதார நலன்கள் முடிவுக்கு வருவதை சீனா விரும்பவில்லை. டிடிபி, பஷ்டூன் தேசியவாதம் மற்றும் துராந்த் கோடு எல்லை தகராறுகள் இருவருக்கும் இடையே இதுவரை தீர்க்கப்படவில்லை.” என்கிறார் ஸ்வஸ்தி ராவ்.
பஷ்டூன் தேசியவாதம் என்பது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் வாழ்ந்துவரும் பஷ்டூன் இனத்தினர் தங்களின் தனித்துவமான இன அடையாளத்தை முன்னிறுத்திப் போராடும் ஒரு அரசியல் இயக்கம்
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான எல்லை ‘துராந்த் கோடு’ என்று அழைக்கப்படுகிறது. இந்த எல்லைக் கோட்டை எந்த ஆப்கானிஸ்தான் அரசாங்கமும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த எல்லையை ஆப்கானிஸ்தான் ஒரு காலனித்துவ ஒப்பந்தமாகக் கருதுகிறது.
தாலிபன்களுடன் மாறி வரும் இந்தியாவின் உறவு

பட மூலாதாரம், MEA INDIA
கடந்த வியாழக்கிழமை, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர், தாலிபன்களின் இடைக்கால வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகியுடன் தொலைபேசியில் பேசினார்.
ஆகஸ்ட் 2021 இல் தாலிபன்கள் ஆட்சி கைப்பற்றிய பிறகு, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற முதல் உயர்மட்ட அரசியல் உரையாடலாக இது காணப்படுகின்றது.
மே 6 மற்றும் 7 ஆம் தேதி இரவு தொடங்கிய இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு இந்த உரையாடல் நடந்தது.
ஜெய்சங்கரின் பேச்சுவார்த்தைக்கு முன், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் அமீர் கான் முத்தகி ஆகியோர் இந்த ஆண்டு தொடக்கத்தில் துபையில் சந்தித்தனர்.
இது இந்தியாவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்பட்டது.
இருபது ஆண்டு கால ஜனநாயக ஆட்சியின் போது இந்தியா ஆப்கானிஸ்தானில் பெருமளவில் முதலீடு செய்திருந்தது.
அந்தக் காலத்தில், பல ஆப்கானிய மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான் ராணுவ அதிகாரிகளும் பயிற்சிக்காக இந்தியா வந்தனர்.
ஆப்கானிஸ்தானின் புதிய நாடாளுமன்றக் கட்டடமும் இந்தியாவால் கட்டப்பட்டது. ஆனால், தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை மாறியது.
இதற்குப் பிறகு, இந்தியாவின் பிராந்திய போட்டியாளர்களான பாகிஸ்தான் மற்றும் சீனா அங்கு தங்கள் செல்வாக்கை அதிகரிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்தன.
இந்தக் காலகட்டத்தில், இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான தொடர்பு ராஜ்ஜீய மட்டத்தில் இருந்தது, இது வெளியுறவு அமைச்சகத்தில் உள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இரான் விவகாரங்களுக்கான இணைச் செயலாளரால் கையாளப்பட்டது.
இந்தியா தாலிபனை அங்கீகரிக்கவில்லை, ஆனால் ஜூன் 2022 முதல் காபூலில் ஒரு தொழில்நுட்ப பணியை மேற்கொண்டுள்ளது .
ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதே இதன் நோக்கமாக உள்ளது.
எந்த நாடும் இதுவரை தாலிபன் அரசாங்கத்தை முறையாக அங்கீகரிக்கவில்லை, ஆனால் சுமார் 40 நாடுகள் ஆப்கானிஸ்தானுடன் ஏதோ ஒரு வகையான ராஜ்ஜீய ரீதியிலான அல்லது முறைசாரா உறவுகளைப் பேணுகின்றன.
தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, ஆகஸ்ட் 31, 2021 அன்று இந்தியா தாலிபன்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது.
இரு நாடுகளுக்கும் இடையே பகிரங்கமாக ஒப்புக் கொள்ளப்பட்ட முதல் உரையாடலாக இது காணப்படுகின்றது.
2021ம் ஆண்டு அக்டோபர் மாதம், இந்திய அதிகாரிகள், மற்ற ஒன்பது நாடுகளுடன் சேர்ந்து, தேவையான மனிதாபிமான உதவிகள் குறித்து விவாதிக்க மீண்டும் ரஷ்யாவில் தாலிபன்களைச் சந்தித்தனர் .
கடந்த ஆண்டு, இந்திய தூதர் ஜே.பி. சிங், தாலிபனின் தற்காலிக பாதுகாப்பு அமைச்சர் முல்லா யாகூப்பை சந்தித்தார்.
பேச்சுவார்த்தையின் போது, இரானின் சபாஹர் துறைமுகம் வழியாக இந்தியாவுடனான வர்த்தகத்தை அதிகரிக்க இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு ஒரு வாய்ப்பை முன்மொழிந்தது.
பாகிஸ்தானின் கராச்சி மற்றும் குவாதர் துறைமுகங்களைத் தவிர்த்து இரான் மற்றும் மத்திய ஆசியாவுடன் வர்த்தகம் செய்ய முடியும் என்பதற்காக, இரானில் சபாஹர் துறைமுகத்தை இந்தியா கட்டி வருகிறது.
“இந்தியாவில் தாலிபன்கள் எங்களுடன் நிற்கிறார்கள் என்று கூறப்படுகிறது, ஆனால் இது பாதி உண்மைதான்.
உண்மையில், சீனா ஆப்கானிஸ்தானில் ஒரு பெரிய பங்கு வகிக்கிறது, அங்கு பெரிய முதலீடுகளைக் கொண்டுள்ளது.
எனவே, இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்த பிராந்தியத்தில் இந்தியாவை விட சீனா பெரிய பங்கு வகிக்கிறது என்பதை தாலிபன்கள் அறிவார்கள், எனவே, தாலிபன்கள் சமநிலையைப் பேணி வருகின்றனர்” என்று ஸ்வஸ்தி ராவ் கூறுகிறார்.
ஒருபுறம் தாலிபன்களுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் இந்தியா, மறுபுறம் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளையும் வழங்கி வருகிறது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC