SOURCE :- BBC NEWS

இரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெறும் மோதல், இந்திய மாணவர்கள்

பட மூலாதாரம், Ashraf Bhatt

இரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெறும் மோதலுக்கிடையில் சுமார் நான்காயிரம் இந்திய மாணவர்கள் இரானில் சிக்கித் தவித்து வருகின்றனர். வான்வழிப்பாதை மூடப்பட்டுள்ளதால் அவர்கள் இந்தியாவுக்கு திரும்புவது தற்போது கடினமாகியிருக்கிறது.

இந்தியாவிலிருக்கும் அவர்களது குடும்பத்தினர் அவர்களது பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளனர்.

இவர்களின் பெரும்பாலான மாணவர்கள் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி இந்த குடும்பங்கள் ஞாயிறன்று ஶ்ரீநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

“டெஹ்ரானில் இருக்கும் இந்திய தூதரகம் சூழ்நிலையை கண்காணித்து வருகிறது. இந்திய மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அரசு அக்கறை கொண்டுள்ளது. சில மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்,” என இரானில் இருக்கும் இந்திய மாணவர்கள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தனது குடிமக்கள் அனைவரும் டெஹ்ரானை விட்டு அவர்களாகவே வெளியேறி பாதுகாப்பான இடங்களை அடையும் படி இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்திய குடிமக்களுக்கு உதவுவதற்காக செவ்வாய்கிழமை வெளியுறவு அமைச்சகம் ஒரு உதவி மையத்தையும் தொடங்கியுள்ளது.

இரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெறும் மோதல், இந்திய மாணவர்கள்

பட மூலாதாரம், MOHD. FARZAN RIZVI

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் காலரஷ் பகுதியை சேர்ந்த அஷ்ரப் பட், ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார் .

அவரது மகள் ரவ்நாக் அஷ்ரப் டெஹ்ரானில் உள்ள இரான் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தார். அவர் இந்தியாவிலிருந்து இரானுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் சென்றிருந்தார்.

ஆனால் தற்போது சூழ்நிலை மாறியிருக்கும் நிலையில், ரவ்நாக் இரானில் சிக்கிக்கொண்டிருக்கிறார். “அவள் படிக்கசென்றபோது, தனது கனவை நிறைவேற்றிக்கொள்ள செல்கிறாள் என நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால் இப்போது அவளது பாதுகாப்பு குறித்து கவலை கொண்டிருக்கிறோம். இருப்பினும், இந்திய தூதரகம் குழந்தைகளை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது,” என அஷ்ரப் பட் பிபிசியிடம் தெரிவித்தார்.

“நாங்கள் இந்திய அரசுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்,” என அவர் தெரிவித்தார்.

பிபிசி ரவ்நாக்கை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது அவர் கோம் நகரில் இருப்பதாக தெரிவித்தார்.

“நாங்கள் டெஹ்ரானை விட்டு திங்கள்கிழமை காலை 6 மணிக்கு (இரான் நேரம்) புறப்பட்டு இங்கு காலை 10 மணிக்கு வந்து சேர்ந்தோம். தற்போது நாங்கள் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறோம்,” என அவர் கூறினார்.

“இங்கு சுமார் ஆயிரம் மாணவர்கள் இருக்கிறார்கள். இவற்றில் 180 மாணவர்கள் எனது பல்கலைக்கழகத்திலிருந்து மட்டும் வந்தவர்கள். மற்றவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள்,” என அவர் குறிப்பிட்டார்.

டெஹ்ரானில் உள்ள சூழ்நிலை குறித்து பேசிய ரவ்நாக், “எங்களது பல்கலைக்கழகத்திலிருந்து வெறும் இரண்டு நிமிட பயண தூரத்தில் இருக்கும் தொலைக்காட்சி நிலையம் தாக்கப்பட்டது. ஆனால் நாங்கள் கல்லூரியை விட்டு வெளியேறும்வரை அங்கு குண்டு எதுவும் விழவில்லை” எனத் தெரிவித்தார்.

இஸ்ரேல் - இரான், ஆயதுல்லா அலி காமனெயி, அமெரிக்கா

தற்போதைய சூழலில் வான்வழிப் பாதை மூடப்பட்டுள்ளதுடன், இரானை விட்டு வெளியேற மூன்றாவது நாட்டின் உதவி தேவைப்படக்கூடும் என்ற நிலையில் மாணவர்கள் நாடு திரும்புவது குறித்து இந்திய அதிகாரிகள் எந்த தெளிவான தகவலையும் தரவில்லை.

குப்வாராவைச் சேர்ந்த குலாம் முஹிதீன் சர்க்காரியின் மகள் நூர் முன்தஹா, ஷீராஸ் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு மாணவியாக உள்ளார்.

குலாம் முஹிதீன் ஶ்ரீநகரில் ஞாயிறன்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றார். “தூதரகம் தங்களை பேருந்துகள் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வதாக எனது மகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காணொளி அழைப்பு மூலம் தெரிவித்தார். ஆனால் அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பதை சொல்லவில்லை,” என அவர் கூறினார்.

முஹிதீன் சொல்கிறார், “எங்களது குழந்தைகளை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அரசு அழைத்துவரவேண்டும் என விரும்புகிறோம்.”

அரசு தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டுக்குள் சுமார் 1500 இந்திய மாணவர்கள் இரானில் மருத்துவம் படித்து வந்தனர்.

மருத்துவ கல்வி தவிர மத கல்விக்காக அங்கு செல்லும் இந்திய மாணவர்களும் இருக்கிறார்கள்.

இரானிலிருக்கும் டெஹ்ரான், கோம். மற்றும் ஷிராஸ் போன்ற நகரங்களில் இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள். இதைத் தவிர, ஷியா சமூகத்தை சேர்ந்த குழந்தைகள் கோம் மற்றும் மஷாத்தில் மத கல்வியை பெறுகின்றனர். இராக்கில் இருக்கும் நஜஃப்க்கு பிறகு ஷியா மதக் கல்விக்கு கோம் ஒரு முக்கிய மையமாக கருதப்படுகிறது.

இரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெறும் மோதல், இந்திய மாணவர்கள்

பட மூலாதாரம், Getty Images

மலிவான மருத்துவ கல்வி

தனது மகள் நீட் தேர்வு எழுதியதாகவும் ஆனால் அதில் வெற்றிபெற முடியவில்லை என்றும் அஷ்ரஃப் பட் தெரிவித்தார். அதன் பின்னர், மற்ற நாடுகளைவிட இரானில் எம்பிபிஎஸ் கல்வி மலிவானது என்பதால் அவரது மகளை அங்கு அனுப்ப முடிவு செய்தார்.

மருத்துவம் பயில்வதற்காக இந்திய மாணவர்கள் உக்ரேன் போன்ற நாடுகளுக்கும் சென்றுகொண்டிருந்தனர், ஆனால் அங்கு மோசமாகி வரும் சூழல் காரணமாக அவர்கள் தற்போது இரானை நோக்கி திரும்பியிருக்கிறார்கள்.

அஷ்ரஃப் பட்டின் கூற்றின்படி, இரானில் ஆறுவருட மருத்துவக் கல்விக்கான கட்டணம் சுமார் 15 முதல் 30 லட்சம் ரூபாய், அதுவே வங்கதேசத்தில் அது இரண்டுமடங்கு அதாவது சுமார் 60 லட்சம் ரூபாய்.

டெஹ்ரானில் உள்ள இரான் யூனிவர்ஸிட்டி ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ், இஸ்லாமிக் ஆசாத் யூனிவர்ஸிட்டி ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ், ஷாஹித் பெஹெஷ்டி யூனிவர்ஸிட்டி மற்றும் கெர்மான் யூனிவர்ஸிட்டி ஆகியவை இரானில் எம்பிபிஎஸ் படிப்பதற்கான முக்கிய பல்கலைக்கழகங்களில் அடங்கும்.

பிபிசி, ஸ்ரீநகரில் உள்ள எஜுகேஷன் ஸோன் என்ற அமைப்பை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது, அங்கு சஜ்ஜாத் என்ற ஊழியர் அழைப்பை ஏற்றார். தற்போது தங்கள் அமைப்பின் இயக்குநரும் இரானில் சிக்கியிருப்பதாகத் அவர் தெரிவித்தார்.

இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் சேர்க்கை பெறுவதற்கு எஜுகேஷன் ஸோன் போன்ற பல முகமைகள் உதவுகின்றன.

இரானில் மாணவர்களை சேர்க்கும் நடைமுறையில் உதவும் முகமை ஒன்றின் பெயர் வெளியிட விரும்பாத ஊழியர் ஒருவர், “இரானில் வழங்கப்படும் உதவித்தொகையும் சிறப்பாக உள்ளது, அதனால்தான் இங்கிருந்து மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இரானை நோக்கிச் செல்கின்றனர்,” எனக் கூறினார்.

வெளிநாடுகளில் கல்வி வாய்ப்பு வழங்கும் முகமைகளின் கூற்றுப்படி, இரானில் கட்டணம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் கணிசமாகக் குறைவாக உள்ளது.

காஷ்மீர் மாணவ-மாணவிகள் இரானுக்குச் செல்வதற்கு முக்கிய காரணம் குறைந்த கட்டணம் மட்டுமல்ல, தங்களது சொந்த ஊரைப் போல் உணரச் செய்யும் வாழ்க்கை முறையும், பருவநிலையும்தான்.

ஷியா முஸ்லீம், மஷ்ஹத் நகரம், மதக் கல்விக்கான மையம்

பட மூலாதாரம், Getty Images

ஷியா மதக் கல்விக்கான மையம்

உலகெங்கிலும் உள்ள ஷியா முஸ்லிம்களுக்கு மதக் கல்வியின் முக்கிய மையமாக இரான் தற்போது மாறியுள்ளது. இருப்பினும், இராக்கின் நஜஃப் மற்றும் சிரியாவின் டமாஸ்கஸ் நகரங்களிலும் மாணவர்கள் மதக் கல்வியைப் பெறுகின்றனர்.

ஆனால், இராக்கில் சதாம் உசேன் ஆட்சிக் காலத்தில், மதக் கல்வியின் மையம் படிப்படியாக இரானை நோக்கி மாறியது. மதக் கல்வி பயில இரானின் மஷ்ஹத் மற்றும் கோம் நகரங்களுக்கு மாணவர்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

மதக் கல்வி பெறுவதற்காக இரான் செல்லும் இந்திய மாணவர்களுக்கு பல வசதிகள் கிடைக்கின்றன. ஒருபுறம் அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது; மறுபுறம், முழு படிப்புச் செலவையும் இரான் அரசு ஏற்றுக்கொள்கிறது.

டெஹ்ரானில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோம் நகரம், மதக் கல்வியின் முக்கிய மையமாக விளங்குகிறது. இங்கு ஐந்து முதல் ஆறு முக்கிய மதரஸாக்கள் உள்ளன, அவற்றில் நவீன கல்வியுடன் மதக் கல்வியும் வழங்கப்படுகிறது.

கோம் நகரில் சுமார் ஒன்பது ஆண்டுகளாக வசித்து வரும் முகமது ஃபர்சான் ரிஸ்வி, இமாம் கோமைனி மதரஸாவில் பயின்று வருகிறார். “கோம் நகரில் தற்போது நிலைமை இயல்பாக உள்ளது,” என அவர் தொலைபேசி உரையாடலில் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தின் பாராபங்கி மாவட்டத்தைச் சேர்ந்த ஃபர்சான், “இங்கு விமானப் பயண வழித்தடங்கள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. ஆனால், பள்ளிகள், சந்தைகள் உள்ளிட்டவை வழக்கம்போல இயங்குகின்றன. தற்போது இங்கு எந்த ஆபத்தும் இருப்பதாக தெரியவில்லை,” எனக் கூறினார்.

இரானின் மஷ்ஹத் மற்றும் கோம் ஆகிய இரு நகரங்களும் ஷியா முஸ்லிம்களுக்கு மத ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.

“மஷ்ஹத், டெஹ்ரானில் இருந்து சுமார் 850 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கும் இதுவரை எந்த ஆபத்தும் இல்லை,” என ஃபர்சான் ரிஸ்வி தெரிவித்தார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இரானின் வெளியுறவு அமைச்சர் அபாஸ் அரக்ஸி

பட மூலாதாரம், Seyed Abbas Araghchi

அரசின் ஆலோசனை

இரானில் அமைந்துள்ள இந்தியத் தூதரகம், டெஹ்ரான் நகரில் வசிக்கும் இந்தியக் குடிமக்கள், உடனடியாக நகரத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது.

இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே நீடித்து வரும் மோதலின் மத்தியில், இந்தியத் தூதரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “தங்கள் சொந்த முயற்சியால் டெஹ்ரானை விட்டு வெளியேற வாய்ப்புள்ள அனைத்து இந்தியக் குடிமக்களும் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவேண்டும் ” என்று தெரிவித்துள்ளது.

அதே நேரம், தூதரகத்தோடு தொடர்பில் இல்லாமல் டெஹ்ரானில் இன்னமும் இருக்கும் இந்திய குடிமக்கள் உடனடியாக தங்கள் இருப்பிட விவரங்களையும் தொடர்பு எண்ணையும் இந்தியத் தூதரகத்திற்கு அனுப்ப வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டெஹ்ரானை உடனடியாக காலி செய்யவேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். “எல்லோரும் டெஹ்ரானை விட்டு உடனடியாக வெளியேறவேண்டும்,” என அவர் தனது சமுக ஊடக பக்கத்தில் பதிவிட்டார்.

இரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான இந்த மோதல் எதிர்வரும் நாட்களில் எந்த திசையில் செல்லும் என்பதை கூறுவது கடினம். ஆனால் இரண்டு நாடுகளிலும் சிக்கியுள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பும் , அவர்களை திரும்ப அழைத்து வருவதும் அரசுக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU