SOURCE :- BBC NEWS

ராஜா ரகுவன்ஷியும் சோனமும் .

பட மூலாதாரம், Sameer Khan/BBC Hindi

51 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தூரில் உள்ள சகார் நகரில் வசிக்கும் 29 வயதான ராஜா ரகுவன்ஷி மற்றும் 27 வயதான சோனம் தம்பதியினர், தங்கள் தேனிலவுக்காக மேகாலயா சென்றிருந்தனர்.

ஆனால் மே 23 அன்று அவர்கள் காணாமல் போனார்கள்.

11 நாட்களுக்குப் பிறகு, ஜூன் 2 ஆம் தேதி, கிழக்கு காசி மலைகளில் உள்ள வெய்சாடோங் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள 150 அடி ஆழமான பள்ளத்தாக்கில் ராஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது, ஆனால் சோனமை காணவில்லை.

ஜூன் 4ம் தேதி, புதன்கிழமையன்று மாலை ராஜா ரகுவன்ஷியின் உடல் மேகாலயாவில் இருந்து அவரது வீட்டிற்கு வந்து சேர்ந்தது.

மே 23 அன்று அவர்கள் காணாமல் போவதற்கு ஒரு நாள் முன்பு, மேகாலயாவில் உள்ள நோங்ரியாட்டை அடைந்த இந்த ஜோடி, கடைசியாக ஷிபாரா ஹோம்ஸ்டேயில் இருந்து வெளியே சென்றனர்.

உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர், ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர், ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

பட மூலாதாரம், Sameer Khan/BBC Hindi

காவல்துறை கூறுவது என்ன?

“இது ஒரு கொலை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ‘டாவோ’ (பெரிய கூர்மையான கத்தி) ஒன்றையும் நாங்கள் மீட்டுள்ளோம்.

இருப்பினும், மேலதிக தகவல் பெறுவதற்கு, பிரேத பரிசோதனை அறிக்கைக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்”

என்று கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) விவேக் சியம் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

மேலும், காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், தற்போது சோனமைக் கண்டுபிடிப்பதே அவர்களின் முன்னுரிமை என்றும் அவர் கூறியிருந்தார்.

சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை வைத்துள்ள குடும்பத்தினர்

ராஜாவின் மூத்த சகோதரர் (மெரூன் நிற டி-சர்ட்)

பட மூலாதாரம், Sameer Khan/BBC Hindi

மே 23 அன்று ராஜா மற்றும் சோனம் வாடகைக்கு எடுத்த ஸ்கூட்டியின் ஜிபிஎஸ், அவர்கள் மவ்க்மா கிராமத்தில் சிறிது நேரம் நின்றிருந்ததைக் காட்டியதாக மேகாலயா காவல்துறையினர் தெரிவித்தனர்.

ராஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடம் அங்கிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இந்தூரில் உள்ள ராஜாவின் குடும்பத்தினர், காவல்துறையினர் மெத்தனமாக வேலை செய்வதாகக் குற்றம் சாட்டி, “ராஜாவின் பணப்பை, நகைகள் மற்றும் பிற பொருட்கள் காணவில்லை” என்று கூறினர்.

ராஜாவின் கடத்தல் மற்றும் கொலையில் சந்தேகம் இருப்பதாகவும், இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் ராஜாவின் மூத்த சகோதரர் சச்சின் ரகுவன்ஷி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோதி தலையிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இப்போது சோனம் ரகுவன்ஷியின் தந்தை சிபிஐ விசாரணை கோரிக்கை வைத்துள்ளார்.

ராஜா ரகுவன்ஷியின் உடல்

பட மூலாதாரம், Sameer Khan/BBC Hindi

இந்த வழக்கில், இறந்த ராஜா ரகுவன்ஷியின் மனைவி சோனம் ரகுவன்ஷி சரணடைந்ததாகவும், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேகாலயா காவல்துறை தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் காஜிபூரில் சோனம் ரகுவன்ஷி சரணடைந்ததாக மேகாலயா காவல்துறை கூறுகிறது.

இதற்கிடையில், மேகாலயா காவல்துறையினர் தவறாக வழிநடத்துவதாக குற்றம் சாட்டியுள்ள சோனம் ரகுவன்ஷியின் தந்தை தேவி சிங், அவரது மகள் சோனம் நிரபராதி என்று கூறியுள்ளார்.

திங்கட்கிழமை காலை (இன்று) , இந்தூரைச் சேர்ந்த காணாமல் போன தம்பதியினரின் வழக்கு தொடர்பான புதிய தகவல்களை மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா வெளியிட்டுள்ளார்.

“ராஜா கொலை வழக்கில் வெறும் ஏழு நாட்களுக்குள் மேகாலயா காவல்துறை பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது” என்று அவர் தனது எக்ஸ் தளக் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

“தாக்குதல் நடத்திய மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஒரு பெண் சரணடைந்துள்ளார், மேலும் தாக்குதல் நடத்திய மற்றொரு நபரைக் கைது செய்யும் நடவடிக்கையும் தொடர்ந்து நடந்து வருகிறது”என்றும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

மேகாலயா, இந்தூர் மற்றும் உ.பி. காவல்துறை கூறுவது என்ன?

உத்தரபிரதேசத்தின் காஜிபூரில் ராஜா ரகுவன்ஷியின் மனைவி சோனம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கு அவர் காவல்துறையிடம் சரணடைந்ததாகவும் மேகாலயா காவல்துறை இயக்குநர் ஜெனரல் இடஷிஷா நோங்ராங் கூறியதாக குவஹாத்தியில் உள்ள பிபிசி இணை நிருபர் திலீப் குமார் சர்மா தெரிவித்துள்ளார்.

இரவு நேர சோதனையின் போது சந்தேகத்திற்குரிய மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டதாக இடஷிஷா நோங்ராங் கூறினார்.

“உத்தரப்பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார், மேலும் இரண்டு குற்றவாளிகள் இந்தூரில் இருந்து சிறப்பு விசாரணைக் குழுவால் கைது செய்யப்பட்டனர். நந்த்கஞ்ச் காவல் நிலையத்தில் சரணடைந்த சோனம், பின்னர் கைது செய்யப்பட்டார்” என்றும் காவல்துறை இயக்குநர் ஜெனரல் தெரிவித்தார்.

இதற்கிடையில், உத்தரபிரதேசத்தின் காஜிப்பூரில் உள்ள ஒரு தாபாவில் சோனம் ரகுவன்ஷி கைது செய்யப்பட்டதாக இந்தூர் காவல்துறை தெரிவித்துள்ளதாக இந்தூரில் உள்ள பிபிசியின் இணை பத்திரிகையாளர் சமீர் கான் தெரிவித்தார்.

காணாமல் போன ராஜா மற்றும் சோனமைக் கண்டுபிடிக்க இந்தூர் மற்றும் மேகாலயா போலீசார் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக இந்தூர் காவல் ஆணையர் சந்தோஷ் சிங் குறிப்பிட்டார்.

மேகாலயா காவல்துறையினரால் விசாரிக்கப்படும் மூன்று குற்றவாளிகள் ராஜ் குஷ்வாஹா, விஷால் சவுகான் மற்றும் ஆகாஷ் ராஜ்புத் என்றும், அவர்கள் மூவரும் இந்தூரைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்தூரின் கூடுதல் டி.ஜி.பி (குற்றப்பிரிவு) ராஜேஷ் திண்டோதியா, பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

மறுபுறம், பனாரஸ்-கோரக்பூர் நெடுஞ்சாலையில் உள்ள நந்த்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள காஷி தாபாவில் சோனம் என்ற பெண் இருப்பதாக மத்தியப் பிரதேச காவல்துறை தெரிவித்ததாக காஜிப்பூர் எஸ்பி இராஜ் ராஜா ஊடகங்களுக்குத் தெரிவித்தார் .

“இந்தத் தகவலை அறிந்ததும், எஸ்.ஓ. நந்த்கஞ்ச் படையுடன் தாபாவுக்குச் சென்றார். உடனடியாக அவர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், சிகிச்சை பெற்ற பிறகு, அவர் ஒன் ஸ்டாப் மையத்திற்கு (பெண்களுக்கான தடுப்புக் காவல் மையம்) கொண்டு செல்லப்பட்டார்” என்று அவர் கூறினார்.

“மேகாலயா மற்றும் மத்தியப் பிரதேச காவல்துறை அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம், அவர்கள் வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். சோனம் கைது செய்யப்பட்டபோது, ​​அவர் தனியாக இருந்தார், அவரது உடல்நிலை முற்றிலும் நன்றாக உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ராஜா மற்றும் சோனம் ரகுவன்ஷியின் குடும்ப உறுப்பினர்கள் கூறுவது என்ன?

சோனம் ரகுவன்ஷியின் தந்தை தேவி சிங்

பட மூலாதாரம், ANI

சோனம் ரகுவன்ஷியின் தந்தை தேவி சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனது மகள் சோனம் ரகுவன்ஷி நிரபராதி என்றும், அவர் அப்படிச் செய்ய மாட்டார் என்றும் தனது மகள் மீது முழு நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.

“இரு குடும்பத்தினர் மற்றும் அவர்கள் இருவரின் சம்மதத்துடன் தான் திருமணம் நடந்தது.

அங்குள்ள அரசாங்கம் (மேகாலயா) முதல் நாளிலிருந்தே பொய் சொல்லி வருகிறது. யார் யார் கைது செய்யப்பட்டார்கள் என்பதை அங்குள்ள அரசாங்கம் சொல்ல வேண்டும். என் மகள் காஜிபூருக்குச் சென்று தாபாவிலிருந்து அவரே தான் போன் செய்தார்.

காவல்துறை தாபாவை அடைந்து அங்கிருந்து அவரை அழைத்து வந்தனர். நான் சோனமிடம் பேசவில்லை” என்று தேவி சிங் கூறினார்.

“அந்தப் பெண் ஏன் கொலை செய்ய வேண்டும்? அப்படியானால் அவர்கள் ஏன் சுற்றுலாவுக்குச் செல்ல வேண்டும்? இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமித் ஷாவிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். மேகாலயா காவல்துறை இந்தக் கதையை ஜோடித்துள்ளது.”என்றார்.

மேகாலயா காவல்துறை சரியான விசாரணை நடத்தவில்லை என்ற சோனமின் தந்தை முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை அம்மாநில அமைச்சர் அலெக்சாண்டர் லாலு ஹெக் கண்டித்துள்ளார்.

இந்த வழக்கில் மேகாலயா காவல்துறை சிறப்பாக விசாரணை நடத்தியுள்ளதாகவும், மாநிலத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பவர்கள் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அதே நேரத்தில், ராஜா ரகுவன்ஷியின் தாயார் உமா ரகுவன்ஷி, தனது மகனின் கொலைக்கு காரணமானவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

‘ராஜாவும் சோனமும் அவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர், மேகாலயா செல்ல திட்டமிட்டது சோனம் தான். சோனம் தனது டிக்கெட்டை முன்பதிவு செய்ததாக ராஜா கூறியிருந்தார்’ என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், உமா ரகுவன்ஷியும் சிபிஐ விசாரணைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU