SOURCE :- BBC NEWS

இரண்டு கரப்பான்களை உணவு, தண்ணீரின்றி அடைத்து வைத்து, அவற்றின் செயல்பாடுகள் அவதானிக்கப்பட்டன.

பட மூலாதாரம், Subagunam Kannan/BBC

கரப்பான் பூச்சி.

இந்த வார்த்தையை கேட்டதுமே சிலர் பதறியடித்துக் கொண்டு துள்ளுவதைப் பார்த்திருப்போம். ஆனால், இந்தக் கரப்பான்களின் வாழ்க்கைச் சுழற்சியில் சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சமில்லை.

கரப்பான் பூச்சிகளின் ‘தலையை வெட்டினாலும் சில நாட்களுக்கு அவை உயிருடன் இருக்கும்’ என்று சொல்லப்படும் ஒரு தகவல் பற்றிய சந்தேகம் நீண்ட நாட்களாக இருந்துகொண்டே இருந்தது.

குறிப்பாக, ஒரு கரப்பான் பூச்சியால் எத்தனை நாட்களுக்கு உணவு, தண்ணீரின்றி இருக்க இயலும் என்ற சந்தேகமும் எழுந்தது. ஏனெனில், ஒருவேளை தலையை வெட்டிய பிறகு காயம் ஆறிவிட்டாலும், மனிதர்களைப் போல அனைத்து உடல் இயக்கங்களையும் மூளையே கட்டுப்படுத்தவில்லை என்றாலும், உயிர் வாழ உணவு, தண்ணீர் தேவை அல்லவா!

தலையை வெட்டினாலும் உயிர் பிழைக்கும் திறன் அதற்கு இருப்பதற்கும், அவற்றால் எத்தனை நாட்களுக்கு உணவின்றி உயிருடன் இருக்க முடியும் என்பதற்கும் தொடர்புள்ளதா என்பதை அறிந்துகொள்ள முயன்றேன்.

இதைத் தெரிந்துகொள்ள இரண்டு கரப்பான் பூச்சிகளை வைத்து ஒரு பரிசோதனையை மேற்கொண்டேன். அந்தப் பரிசோதனையின் முடிவுகளும் அதுகுறித்த நிபுணர்களின் விளக்கங்களும் கரப்பான்கள் பற்றிய பல ஆச்சர்யகரமான தகவல்களைத் தெரிந்துகொள்ள உதவின.

கரப்பான் பூச்சிகளில் நடத்திய பரிசோதனை

கடந்த பிப்ரவரி 20ஆம் தேதியன்று ஒரு கரப்பான் பூச்சியைப் பிடித்து, வெள்ளை நிற டப்பாவில் காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்து, உள்ளே வைத்து அடைத்து வைத்தேன்.

அதே டப்பாவில் கடந்த மார்ச் 4ஆம் தேதியன்று மற்றுமொரு கரப்பான் பூச்சியைப் பிடித்து அடைத்து வைத்தேன்.

அவற்றுக்கு எந்தவித உணவோ, தண்ணீரோ கொடுக்காமல், காற்றோட்டம் நிறைந்த ஒரு டப்பாவில் வைத்து, தினசரி கண்காணித்துக் கொண்டிருந்தேன்.

முதல் ஒரு வார காலத்திற்கு அவற்றிடம் சிறு சிறு அசைவுகளும், டப்பா அசைவதை உணர்ந்தால், வெளியேற வழியைத் தேடுவதுமாகத் துடிப்புடன் இருந்தன.

இரண்டாவது வாரத்தில் இருந்து அவற்றின் நடத்தையில் பெரிய வித்தியாசத்தைக் காண முடிந்தது. சிறிது சிறிதாக அவற்றின் உடல் அசைவுகள் குறைய தொடங்கின. நாளடைவில் எந்தவித அசைவுமே இல்லாமல், கிட்டத்தட்ட ஆழ்ந்த உறக்கநிலையில் இருப்பதைப் போல் இருந்தன. ஆனால், உயிருடன் இருந்தன.

தொடுவது, அசைப்பது போல ஏதேனும் இடையூறு ஏற்படுத்தினால், சிறிதளவு நகர்ந்து இடம் மாறி, மீண்டும் அதேபோல ஓர் ஓரத்தில் அசையாமல் நின்றுகொண்டன.

இப்படியே கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பிழைத்திருந்த நிலையில், சிறிதாக இருந்த, முதலில் பிடிக்கப்பட்ட கரப்பான் பூச்சி, ஏப்ரல் 17ஆம் தேதி உயிரிழந்தது. அதாவது உணவு, தண்ணீர் ஏதுமின்றி 56 நாட்கள் அது உயிர் வாழ்ந்தது.

அடுத்ததாக இரண்டாவதாகப் பிடித்த, அளவில் பெரிதாக இருந்த கரப்பான் பூச்சி, மே 5ஆம் தேதி உயிரிழந்தது. அதாவது, உணவு, தண்ணீர் ஏதுமின்றி மொத்தமாக 62 நாட்கள் உயிர் பிழைத்திருந்து, அடுத்த நாள் அது உயிரிழந்தது.

கரப்பான் பூச்சிகள் உணவு, தண்ணீர் இன்றி உயிர் பிழைத்தது எப்படி?

பிப்ரவரி 20ஆம் தேதி அடைத்து வைக்கப்பட்ட, அளவில் சிறிதாக இருந்த கரப்பான் பூச்சி 56 நாட்கள் கழித்து ஏப்ரல் 17ஆம் தேதி உயிரிழந்தது.

பட மூலாதாரம், Subagunam Kannan/BBC

கரப்பான்களின் வெளிப்புற உடலில் ஒரு மெழுகுப் பூச்சு போன்ற படலம் இருக்கும். “அது உடலில் இருந்து நீர் வெளியேறுவதைத் தடுக்க உதவுகிறது. அதனால்தான் அவற்றால் அதிக காலத்திற்குத் தண்ணீரின்றி இருக்க முடிகிறது” என்று விளக்கினார் அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் பல்கலைக் கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியரும் கரப்பான் பூச்சிகளின் உடலமைப்பு குறித்து ஆய்வு செய்தவருமான முனைவர் ஜோசப் குன்கெல்.

அதோடு, ஒரு கரப்பான் பூச்சி அதன் ஆரம்பக்கட்ட வாழ்வில் அதிகளவிலான உணவு கிடைத்து நன்றாகச் சாப்பிட்டால், ஒவ்வொரு பருவத்திலும் அவற்றுக்குச் சுமார் 4 மணிநேரம் மட்டும் சாப்பிட்டால் கூடப் போதுமானது என்ற ஆச்சர்யமான உண்மையையும் அவர் குறிப்பிட்டார்.

அவை தமது உடலில் சேமிக்கப்பட்ட கழிவுகளை மறுசுழற்சி செய்து, புரதம் அல்லது ஆற்றலின் மூலமாகப் பயன்படுத்தும். அத்துடன், ரத்தத்தில் இருக்கும் ட்ரெஹலோஸ் எனப்படும் குளுக்கோஸ் மூலக்கூறுகளால் ஆன சர்க்கரையும் ஆற்றல் மூலமாகச் செயல்படுவதாக விளக்கினார் முனைவர் ஜோசஃப்.

இவைபோக, கரப்பான் பூச்சிகளின் கொழுப்புத் திசுக்களில் வாழும் பாக்டீரியாக்கள் கிட்டத்தட்ட ஒரு வைட்டமின் தொழிற்சாலை போலச் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

“கரப்பான்களின் உடலில் உள்ள பாக்டீரியோசைட்டுகள், சிறப்பு செல்களை கொண்டுள்ளன. இவற்றால் கரப்பான் பூச்சிக்குத் தேவையான அனைத்து வைட்டமின்களையும் உற்பத்தி செய்ய முடியும். எனவே, அது ஊட்டச்சத்துகளுக்காக வெளிப்புற உணவை முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டியதில்லை.”

இரண்டாவதாக மார்ச் 4ஆம் தேதியன்று பிடிக்கப்பட்ட கரப்பான்பூச்சி மே 5ஆம் தேதி 63வது நாளில் உயிரிழந்தது.

பட மூலாதாரம், Subagunam Kannan/BBC

முனைவர் ஜோசஃபின் கூற்றுப்படி, நான் அவதானித்துக் கொண்டிருந்த இந்தக் காரணங்களாலேயே இரண்டு கரப்பான் பூச்சிகளாலும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு உணவு, தண்ணீர் ஏதுமின்றி உயிருடன் இருக்க முடிந்தது.

அதேவேளையில், கரப்பான்கள் குறித்து ஒருமுறை பேசிக் கொண்டிருந்தபோது, சில உயிரினங்கள் மேற்கொள்ளும் குளிர்கால நீண்ட உறக்கநிலையில் எப்படி ஆற்றல் சேமிக்கப்படுகிறதோ, அதேபோன்ற செயல்பாட்டை கரப்பான் பூச்சிகள் மேற்கொண்டிருக்கலாம் என்று கூறினார் கோவாவில் உள்ள ஆரண்யா சுற்றுச்சூழல் ஆய்வு மையத்தின் பூச்சியியலாளர் முனைவர் ப்ரொனோய் பைத்யா.

பொதுவாக விலங்குகள், நீர்நில வாழ்விகள், பூச்சிகள் மத்தியில் குளிர்கால உறக்கம் (Hibernation) என்றொரு பழக்கம் உள்ளது. அதாவது, உணவு கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவக்கூடிய குளிர்காலத்தின்போது ஆழ்ந்த உறக்கநிலைக்கு அவை சென்றுவிடும். அதுவே குளிர்கால உறக்கம் எனப்படுகிறது. குளிர் காலம் முடிந்த பிறகு அந்த உயிரினங்கள் விழித்தெழுந்து தனது வாழ்வை தொடரும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

அப்படி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது விலங்குகளின் உடல் வெப்பநிலை 1 முதல் 5 டிகிரி செல்ஷியஸ் வரை குறையக்கூடும். இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 8 முதல் 50க்கும் கீழே குறைந்துவிடும். இதன் மூலம் தனது உடலில் சேமிக்கப்பட்ட ஆற்றலை வீணாக்காமல் ஆழ்ந்த உறக்கத்திலேயே குளிர்காலத்தை அவை கடந்துவிடுகின்றன.

இத்தகைய ஆழ்ந்த உறக்கநிலைக்குச் செல்லும் பழக்கம் கரப்பான்பூச்சிகளுக்கு இல்லை என்றாலும், அதில் மேற்கொள்ளப்படும் ஆற்றல் சேமிப்பு குணாதிசயம் அவற்றுக்கு இருப்பதாகத் தெரிவித்தார் முனைவர் ப்ரொனோய் பைத்யா.

அதேவேளையில், ஒருவேளை அவற்றுக்குத் தண்ணீர் தேவைப்பட்டாலும், அதைப் பருகித்தான் ஆக வேண்டும் என்றில்லை. ஏனெனில், “கரப்பான்கள் பிற உயிரினங்களைப் போல தண்ணீரைப் பருகினாலும், காற்றிலுள்ள ஈரப்பதத்தில் இருந்தும் அவற்றால் தண்ணீரை உறிஞ்சிக் கொள்ள முடியும் என்பதால், அந்த வழிகளில் அவை நீர்ச்சத்துகளைப் பெற்று பிழைத்திருக்க வாய்ப்புள்ளதாக” விளக்கினார் கேரளா வேளாண் பல்கலைக்கழகத்தின் பூச்சியியலாளர் முனைவர் பிரதாபன்.

கரப்பான் பூச்சிகள் தலை துண்டிக்கப்பட்ட பிறகும் உயிருடன் இருப்பது எப்படி?

கரப்பான்களின் முழு உடல் செயல்பாடுகளையும் மூளை ஒட்டுமொத்தமாகக் கட்டுப்படுத்துவதில்லை.

பட மூலாதாரம், Getty Images

கரப்பான்கள் இப்படி பல வாரங்களுக்கு உணவின்றி வாழ முடிவதற்கும் அவை தலை இல்லாமல் உயிருடன் இருப்பதற்கும் இடையே ஏதேனும் தொடர்புள்ளதா என்ற சந்தேகம் பரிசோதனையின் தொடக்கம் முதலே இருந்தது.

ஆனால், இரண்டுக்கும் காரணம் ஒன்றல்ல என்றாலும், தலை இல்லாமல் சாப்பிட முடியாது என்பதால், அப்படிச் சாப்பிடாமலும் உயிர் வாழும் திறன் அவற்றுக்கு இருப்பது எளிதில் மரணிப்பதைத் தடுப்பதாகக் குறிப்பிட்டார் பெங்களூருவில் செயல்படும் அசோகா சுற்றுச்சூழல் அறக்கட்டளையைச் சேர்ந்த பூச்சியியலாளரான முனைவர் ப்ரியதர்ஷன் தர்மராஜன்.

அதோடு, கரப்பான்களின் நரம்பு மண்டலம் மையப்படுத்தப்படாத, உடல் முழுக்கப் பரவியிருக்கும் தன்மை கொண்டது. தலை வெட்டப்பட்டாலும் அவை சிறிது காலத்திற்குப் பிழைத்திருக்க இதுவே முக்கியக் காரணம் என்றும் அவர் விளக்கினார்.

அடிப்படையில் பூச்சிகளின் உடலியல் அமைப்பு மற்ற விலங்குகளுக்கோ மனிதர்களுக்கோ இருப்பதைப் போலானது இல்லை.

“மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளின் நரம்பு மண்டலம் மையப்படுத்தப்பட்ட ஒன்று. அதாவது, நரம்பு மண்டலத்தின் மொத்த கட்டுப்பாடும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குவிந்திருக்கும். ஆனால், பூச்சிகளுக்கு அப்படியல்ல. அவை மையப்படுத்தப்படாத நரம்பு மண்டலத்தைக் கொண்டவை. அதனால், அவற்றின் மூளை சுவாசத்தையோ, உடல் முழுக்க ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுவதையோ கட்டுப்படுத்துவது இல்லை.

இந்த வகையிலான உடலியல் அமைப்பில், உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் நியூரான்கள் உடல் முழுவதும் பரவியிருக்கும். ஆகவே, தலை வெட்டப்பட்டாலும் உடலின் முழு இயக்கமும் உடனடியாக நின்றுவிடாது. உடல் மொத்தமும் செயலிழக்கச் சில மணிநேரம் முதல் சில நாட்கள் வரைகூட ஆகலாம்,” என்று முனைவர் ப்ரியதர்ஷன் விளக்கினார்.

கரப்பான் பூச்சியின் தலை வெட்டப்பட்ட பிறகு என்ன நடக்கும்?

கரப்பான்களால் நீண்ட காலத்திற்கு உணவு, தண்ணீரை உட்கொள்ளாமல் உயிர் வாழ முடியும்

பட மூலாதாரம், Getty Images

கரப்பான்கள் மட்டுமின்றி பூச்சிகளில் பலவும் தலை துண்டிக்கப்பட்ட பிறகும்கூட சிறிது காலம் எப்படி உயிர் வாழ்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கு, அது ஏன் மனிதர்கள் உள்பட பாலூட்டி உயிரினங்களால் முடிவதில்லை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

அடிப்படையில் பாலூட்டிகளின் தலை துண்டிக்கப்பட்டால், ரத்த இழப்பு அதீதமாக நடக்கிறது. இதன் காரணமாக உடலின் முக்கிய திசுக்களுக்கு ஆக்ஸிஜனும் ஊட்டச்சத்துகளும் கொண்டு செல்லப்படுவது தடைபடுகிறது.

அதோடு, பாலூட்டிகள் வாய் மற்றும் மூக்கு வழியாகவே சுவாசிக்கின்றன. இந்தச் செயல்பாட்டைப் பிரதானமாகக் கட்டுப்படுத்துவது மூளைதான். ஆகையால், தலை துண்டிக்கப்பட்டால் முதலில் சுவாசம் தடைபடும்.

ஒருவேளை ரத்த இழப்பைத் தடுத்து, சுவாசத்திற்கு வழி செய்தாலும்கூட மனித உடலால் தலை இல்லாமல் சாப்பிட முடியாது, சாப்பிடாமல் உயிர் வாழ முடியாது. இப்படி ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட பல காரணிகள் சில நிமிடங்களிலேயே உயிரிழப்பை ஏற்படுத்தக் காரணமாகின்றன.

ஆனால், கரப்பான்களுக்கு மனிதர்களைப் போன்ற உடலமைப்பு கிடையாது. கரப்பான்கள் நம்மைப் போல வாய் அல்லது மூக்கு வழியாகச் சுவாசிப்பது இல்லை. அவற்றின் உடலில் பரவியிருக்கும் காற்றுக் குழாய்களின் (tracheae) வழியாகச் சுவாசிக்கின்றன. உடலின் பக்கவாட்டில் உள்ள சுழல்கள் எனப்படும் சிறிய திறப்புகளுடன் இந்தக் குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இவை வால்வுகளை போலச் செயல்பட்டு, பின்னர் உடலின் திசுக்களுக்கும் பிற உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை வழங்குகின்றன. இவற்றுக்கு பாலூட்டிகளைப் போல் மூக்கு அல்லது வாய் மூலம் சுவாசித்து, ரத்தம் வழியாக ஆக்ஸிஜனை கொண்டு செல்லும் நுண்குழாய் அமைப்பு இல்லை. ஆகையால், உடலில் அழுத்தமும் குறைவாக இருக்கும். இதன் காரணமாகவே தலையை வெட்டிய பிறகும், கழுத்துப் பகுதி வேகமாக உறைந்து, காயம் மூடப்பட்டுவிடும். இது கட்டுப்பாடற்ற ரத்தப்போக்கை தவிர்ப்பதோடு, உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனின் வரத்தும் தடைபடுவதில்லை.

வேட்டையாடி உயிரினங்களிடம் இருந்து தப்பிக்க, கரப்பான் பூச்சிகளின் பின்புற நுனியில் இருக்கும் சென்சார் உதவுகிறது.

பட மூலாதாரம், Getty Images

இவற்றோடு சேர்த்து நான் மேற்குறிப்பிட்ட பரிசோதனையில் தெரிய வந்ததைப் போல, கரப்பான்களால் நீண்ட காலத்திற்கு உணவு, நீர் எதையும் உட்கொள்ளாமல் உயிர் வாழவும் முடியும்.

அதோடு, “கரப்பான்களின் மூளை ஒரு சில செயல்பாடுகளை மட்டுமே கட்டுப்படுத்துகிறது. கரப்பான் பூச்சியின் தலையை வெட்டுவது அவற்றின் பார்வை, உணர்கொம்புகள் மற்றும் சில சிக்கலான நடத்தைகளை நிர்வகிக்கும் அதன் நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியை மட்டுமே நீக்குகிறது. ஆனால், நரம்பு மண்டலம் உடல் முழுக்கப் பரவலாக இருப்பதால் உடலின் மீதமுள்ள பகுதிகள் தொடர்ந்து செயல்படுகின்றன,” என்கிறார் ஜோசஃப் குன்கெல்.

இந்தக் காரணங்களால்தான், சில வேட்டையாடிகளால் இரையாக்கப்படாத வரை, தலை துண்டாக்கப்பட்ட ஒரு கரப்பான் பூச்சியால் சில நாட்களுக்கு உயிருடன் இருக்க முடிகிறது. ஆனால், அப்படி ஒரு வேட்டையாடியிடம் இருந்து தப்பிக்க அவை துரிதமாகச் சிந்தித்துச் செயலாற்றி, தப்பிக்க வேண்டும். அதற்கும் மூளையின் உதவி அவசியமில்லை என்கிறார் ஜோசஃப்.

அதாவது மூளையே இல்லாமல், கரப்பான் பூச்சிகளால் ஆபத்துக்கு எதிர்வினையாற்ற முடியும் என்கிறார் அவர். “அவற்றின் பின்புற முனையில் சென்சார்கள் உள்ளன. அந்த சென்சார்கள் காற்றின் இயக்கத்தை உணர்ந்து, ஏதேனும் வேட்டையாடி உயிரினம் பின்புறமாகத் தாக்க வந்தால் அதைக் கண்டறிந்துவிடும். இந்த சென்சார்கள் மூளைக்கு அல்ல, உடலில் உள்ள நரம்பு மையங்களுக்கு நேரடியாக சமிக்ஞைகளை அனுப்பிச் செயல்பட வைக்கின்றன.”

இது மூளை இல்லாமலும்கூட துரிதமாகச் செயல்பட்டு உயிரைக் காத்துக்கொள்ள கரப்பான்களுக்கு உதவுகின்றன.

இருந்தாலும், தலை வெட்டப்பட்ட பிறகான அவற்றின் நிலையை ‘உடலில் உயிர் இன்னும் இருக்கிறது’ என்று கூற முடியுமே தவிர, அவை “வாழ்ந்து கொண்டிருப்பதாக” கருத முடியாது என்கிறார் முனைவர் ப்ரியதர்ஷன் தர்மராஜன்.

ஏனெனில் அவரைப் பொருத்தவரை, “அவை உயிர் பிழைத்திருக்கவில்லை. சாகவும் முடியாமல், பிழைக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன.”

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC