SOURCE :- BBC NEWS

புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்
இரானின் அணுசக்தி திட்டங்களை குறி வைத்து முன்னெச்சரிக்கை தாக்குதல்களை நடத்தியிருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதனை செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்திய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, தேவைப்பட்டால் தாக்குதல்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடரும் என்று எச்சரித்துள்ளார்.
நடான்ஸ் அணுசக்தி நிலையத்தில் புதிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக இரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் முகமை தெரிவித்துள்ளது.
நடான்ஸ் அணுசக்தி நிலையம் இரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து சுமார் 225 கி.மீ தெற்கே அமைந்துள்ளது.
2 அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதாக இரானிய அரசு ஊடகம் தகவல்
இஸ்ரேலிய தாக்குதலில் மூத்த அணு விஞ்ஞானிகள் 2 பேர் கொல்லப்பட்டதாக இரானிய அரசு தொலைக்காட்சி கூறுகிறது.
அதன்படி, ஒருவர் இரான் அணுசக்தி அமைப்பின் (AEOI) முன்னாள் தலைவர் ஃபெரேடூன் அபாசி ஆவர். இரானின் அணுசக்தி நிலையங்களுக்கு அந்த அமைப்பே பொறுப்பு.
2010-ஆம் ஆண்டில் டெஹ்ரான் தெருவில் நடந்த ஒரு படுகொலை முயற்சியில் அபாசி உயிர் தப்பினார்.
மற்றொருவர் டெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகத்தின் தலைவர் முகமது மெஹ்தி தெஹ்ரான்சி ஆவார்.

பட மூலாதாரம், Reuters
புரட்சிகர காவல்படை தலைவர் இறந்தார் – இரானிய அரசு ஊடகங்கள்
இரான் புரட்சிகர காவல்படை தலைவர் ஹொசைன் சலாமி இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலிய அதிகாரி ஒருவர், அதன் தாக்குதல்கள் “இரானின் அணுசக்தி திட்டம் மற்றும் பிற இராணுவ இலக்குகளை” குறிவைத்ததாகக் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
“தாக்குதல்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடரும்”
இரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இரானின் ஆயுதத் திட்டத்தின் ‘இதயத்தை’ குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறினார்.
இரான் அணுசக்தி செறிவூட்டல் திட்டத்தின் மையத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்தார். இரான் தலைநகரான டெஹ்ரானிலிருந்து 225 கி.மீ தெற்கே உள்ள நடான்ஸ் என்ற நகரில் உள்ள இரானின் முக்கிய செறிவூட்டல் நிலையத்தை இஸ்ரேல் தாக்கியதாக நெதன்யாகு கூறினார்.
ஏப்ரல் 2021-இல், அதே வசதியின் மீது இஸ்ரேல் சைபர் தாக்குதல் நடத்தியதாக இரான் குற்றம் சாட்டியது.
“அணுகுண்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள” இரானிய விஞ்ஞானிகளை இஸ்ரேல் குறிவைத்ததாக கூறியுள்ள நெதன்யாகு, தாக்குதல்கள் “எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடரும்” என்று எச்சரித்தார்.
புரட்சிகர காவல்படை தலைமையகம் மீது தாக்குதல் – இரானிய அரசு ஊடகம்
டெஹ்ரானில் உள்ள புரட்சிகர காவல்படை தலைமையகம் இஸ்ரேலிய தாக்குதல்களில் பாதிக்கப்பட்டுள்ளதாக இரானின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படை இரான் ஆயுதப்படைகளின் ஒரு கிளை மட்டுமின்றி, நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்புகளில் ஒன்றாகும்.
மேலும், டெஹ்ரானுக்கு அருகில் வெடிப்புகள் கேட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டெஹ்ரானின் வடகிழக்கில் வெடிப்புகள் கேட்டதாக இரானிய அரசு நடத்தும் நூர் நியூஸை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது. வெடிப்புகளுக்கான காரணம் உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.
டெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை இஸ்ரேல் தாக்கியதாக இரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெஹ்ரானில் உள்ள மக்களிடமிருந்தும் வெடிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரானிய அரசு ஊடகங்களின்படி, டெஹ்ரானின் முக்கிய சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
டெஹ்ரானின் இமாம் காமனெயி சர்வதேச விமான நிலையம் இரானிய தலைநகரிலிருந்து தென்மேற்கே 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

பட மூலாதாரம், Reuters
அமெரிக்கா கூறுவது என்ன?
இரான் மீதான தாக்குதல்களில் அமெரிக்கா பங்கெடுக்கவில்லை என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், “இன்றிரவு, இஸ்ரேல் இரானுக்கு எதிராக ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுத்தது. இரானுக்கு எதிரான தாக்குதல்களில் நாங்கள் ஈடுபடவில்லை, மேலும் எங்கள் முதன்மையான முன்னுரிமை பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளைப் பாதுகாப்பதாகும். இந்த நடவடிக்கை அதன் தற்காப்புக்கு அவசியம் என்று அவர்கள் நம்புவதாக இஸ்ரேல் எங்களுக்குத் தெரிவித்தது. அதிபர் டிரம்பும் நிர்வாகமும் எங்கள் படைகளைப் பாதுகாக்கவும், எங்கள் பிராந்திய பங்காளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். நான் தெளிவாகச் சொல்ல வேண்டும்: இரான் அமெரிக்க நலன்களையோ அல்லது பணியாளர்களையோ குறிவைக்கக் கூடாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“இஸ்ரேல் தாக்க தயாராக இருந்தது அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரியும்”
இரானில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக இருப்பதாக புதன்கிழமை அமெரிக்க அதிகாரிகளிடம் கூறப்பட்டதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விஷயத்தை நன்கு அறிந்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி, அமெரிக்க அதிகாரிகளிடம் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்கா சில அமெரிக்கர்களை இப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியதற்கும், இராக்கில் உள்ள சில அமெரிக்க தளங்கள் மீது ஈரான் பதிலடி கொடுக்கக்கூடும் என்று அமெரிக்கா எதிர்பார்த்ததற்கும் இதுவே காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC