SOURCE :- BBC NEWS

இஸ்ரேல் - இரான், ஆயதுல்லா அலி காமனெயி, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், சேஹெர் அசஃப்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 16 ஜூன் 2025, 02:21 GMT

    புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர்

இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனேயியை கொல்வதற்கான இஸ்ரேலின் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துவிட்டதாக, பிபிசியின் அமெரிக்க கூட்டாளி ஊடக நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் ஆயதுல்லா அலி காமனேயியை கொல்வது, “சிறந்த யோசனை அல்ல” என டிரம்ப் கூறியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் பொதுவெளியில் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

வெள்ளிக்கிழமை இரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியதையடுத்து, இரு தலைவர்களும் பேசியதாக கூறப்படுகிறது.

ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியின்போது, ஆயதுல்லா அலி காமனேயியை கொல்வதற்கான திட்டத்தை டிரம்ப் நிராகரித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமையில் வெளியான தகவலை நெதன்யாகு உறுதி செய்யவோ அல்லது மறுக்கவோ இல்லை.

நெதன்யாகு கூறியது என்ன?

“நடக்காத உரையாடல்கள் குறித்து தவறான தகவல்கள் பல வெளியாகின்றன, நான் அதற்குள் செல்லப் போவதில்லை,” என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்தார்.

“ஆனால், என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்கிறோம் என்று என்னால் சொல்ல முடியும். என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்வோம். அமெரிக்காவுக்கு எது நல்லது என்பது அந்நாட்டுக்கும் தெரியும் என நினைக்கிறேன், அதற்குள் நான் செல்லப் போவதில்லை,”

இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் சிபிஎஸ் நியூஸிடம் கூறுகையில், “அரசியல் தலைவர்களை கொல்ல மாட்டோம் என்பது எங்களின் கொள்கையாக உள்ளது, அணுசக்தி திட்டங்கள் மற்றும் ராணுவ நிலைகள் மீதுதான் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். அவற்றில் தீர்மானிக்கும் இடத்தில் யாரும் சுதந்திரமாகவும் இன்பமாகவும் வாழ முடியும் என நான் நினைக்கவில்லை,” என்றார்.

இஸ்ரேல் - இரான், ஆயதுல்லா அலி காமனெயி, அமெரிக்கா

பட மூலாதாரம், Reuters

டிரம்ப் கூறியது என்ன?

இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை இரானின் அணுசக்தி கட்டமைப்பு மற்றும் மற்ற இலக்குகள் மீது தாக்குதலை தொடங்கியது. இதைத்தொடர்ந்து, இரு நாடுகளும் பரஸ்பரம் பெரியளவிலான தாக்குதலை நிகழ்த்திய நிலையில், ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாக தாக்குதல் தொடர்ந்தது.

ட்ரூத் சோஷியல் எனும் தன் சமூக வலைதளத்தில் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் குறித்து பதிவிட்டுள்ள டிரம்ப், “இரான் மற்றும் இஸ்ரேல் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்,” என்றும் “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நான் செய்தது போல,” இரு நாடுகளும் மோதலை நிறுத்தச் செய்வேன் என்றும் கூறினார். இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே சமீபத்தில் நடைபெற்ற மோதலை குறிப்பிட்டு டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - இரான், ஆயதுல்லா அலி காமனெயி, அமெரிக்கா

பட மூலாதாரம், Reuters

கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டுக்கு புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அமெரிக்கா இஸ்ரேலை தொடர்ந்து ஆதரிக்கும் என்றார். இரான் மீதான தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலிடம் அவர் கூறினாரா என்பதற்கு அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

அமெரிக்கா மற்றும் இரானுக்கு இடையேயான அணுசக்தி தொடர்பான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த விவகாரத்தில் மத்தியஸ்தரான ஓமனின் வெளியுறவு துறை அமைச்சர் பட்ர் அல்புசைதி, அந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அதற்கு முந்தைய தினம் தெரிவித்தார்.

இஸ்ரேல் - இரான், ஆயதுல்லா அலி காமனெயி, அமெரிக்கா

தங்கள் நாட்டில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் நிலையில் பேச்சுவார்த்தைக்கு தாங்கள் தயாராக இல்லை என கத்தார் மற்றும் ஓமனிடம் இரான் தெரிவித்ததாக அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

“இரான் மீதான தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை,” என டிரம்ப் சனிக்கிழமை தெரிவித்தார்.

“இரானால் நாங்கள் எந்த விதத்திலாவது தாக்கப்பட்டால், அமெரிக்க ஆயுதப் படைகளின் முழு பலம் மற்றும் வல்லமையும் இதற்கு முன்பு பார்த்திராத வகையில் பயன்படுத்தப்படும்,” என டிரம்ப் எச்சரித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC