SOURCE :- BBC NEWS

ரூ.100 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சி மோசடியில் 5 மாநில காவல்துறையினரால் முக்கியப் புள்ளியாக செயல்பட்ட ஒருவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி சைபர் கிரைம் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இந்தியா முழுவதும் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களிடம் பணத்தை இழந்துள்ளனர்.
கோவையில் தொடங்கப்பட்ட நிறுவனம் இந்தியா முழுவதும் ரூ. 100 கோடி கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டது எப்படி? அவர்களிடம் பணத்தை இழந்தவர்களால் அதனை திரும்பப் பெற முடியுமா? அந்த நிறுவனத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?
ஹாஷ்பே மோசடி நடந்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
கோவையில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஹாஷ்பே என்கிற நிதி சேவை வழங்கும் நிறுவனம் தொடங்கப்பட்டது. ட்ரான் கனெக்ட் (Tron Connect) என்கிற திட்டத்தில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கலாம் என்று அவர்கள் விளம்பரம் செய்தனர். ஹாஷ்பே இணையதளம் மூலம் கிரிப்டோகரன்சி வாங்கவும், பணத்தை எளிதாகவும் வேகமாகவும் அனுப்ப முடியும் என்றும் அவர்களது விளம்பரங்களில் கூறப்பட்டிருந்தது.
50 டாலர் செலவு செய்து புக்கிங் செய்வதன் மூலம் 50 மில்லியன் டாலர் வரை லாபம் சம்பாதிக்க முடியும் என்றது அந்த விளம்பரம். அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிப்டோகரன்சி பற்றிய பல கவர்ச்சிகரமான விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிறுவனத்தை பிரபலப்படுத்த சென்னையிலும் பின்னர் மும்பையில் சொகுசு கப்பலிலும் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
கார் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை அறிவித்து குறுகிய காலத்திலேயே முதலீட்டாளர்களை கணிசமாக அவர்கள் ஈர்த்துள்ளனர். ஒரு கட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு பணத்தை அவர்கள் திருப்பித் தராமல் போகவே புதுச்சேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான அசோகன் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் பின்னரே இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. அவர் கிரிப்டோ முதலீட்டில் ரூ.93 லட்சத்தை இழந்துள்ளார்.
காவல்துறை விசாரணையில், புதுச்சேரியில் மட்டும் 9 பேர் சுமார் 2.6 கோடி ரூபாயை இழந்திருப்பது தெரியவந்தது. முதலில் புதுச்சேரி குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வந்த, இந்த வழக்கு கடந்த டிசம்பர் மாதம் புதுச்சேரி சைபர் கிரைம் காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த இம்ரான் பாஷா என்பவர் பல மாத தேடலுக்குப் பிறகு பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். இம்ரான் பாஷாவை புதுச்சேரி அழைத்துச் சென்ற காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
கைதான இம்ரான் பாஷா மீது புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் மோசடி வழக்குகள் உள்ளன

பட மூலாதாரம், hashpe.io
“நடிகைகளுக்கு விரைவில் சம்மன்”
இந்தியா முழுவதும் இந்தக் குழு 100 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கிறார் புதுச்சேரி சைபர் கிரைம் பிரிவு காவல் ஆணையர் கீர்த்தி. பிபிசி தமிழிடம் பேசியவர், “முதலீடு செய்தவர்களை நம்ப வைப்பதற்காக ரூ.50 லட்சம் வரை ரொக்கமாக பரிசுத் தொகை வழங்கியுள்ளனர். இதனை நம்பிய முதலீட்டாளர்கள் அவர்கள் தளத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வந்துள்ளனர்.
இணையதளத்தை இவர்களே வடிவமைத்திருந்தனர் என்பதால் கிரிப்டோகரன்சியின் மதிப்பை தங்களின் இஷ்டத்திற்கு ஏற்றி வைத்துள்ளனர். பிறகு திடீரென ஒருநாள் அனைத்தும் நஷ்டம் அடைந்துவிட்டதாகக் கூறி அதன் மதிப்பை குறைத்துவிட்டனர். முதலீடு செய்தவர்கள் சந்தேகம் வந்து கேட்கவே இணையதளத்தை முடக்கிவிட்டு அவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
இதில் மொத்தமாக எவ்வளவு மோசடி நடைபெற்றுள்ளது, யாருக்கு எவ்வளவு தொகை சென்றுள்ளது என்பது பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திரைப்பட நடிகைகளுக்கு இவர்கள் கொடுத்த பணமும் மோசடியாக சம்பாதித்தவை என்பதால் அவர்களுக்கும் விரைவில் முறையாக சம்மன் அனுப்பி விசாரிக்கப்படும்” என்றார்.

பட மூலாதாரம், hashpe.io
கைது செய்யப்பட்டவர்கள் யார்?
கோவையைச் சேர்ந்த இம்ரான் பாஷா, செயத் உஸ்மான் மற்றும் நித்திஷ் ஜெயின் என்கிற மூவர் தான் ஹாஷ்பே நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களாக இருந்து வந்தனர். இவர்களில் நித்திஷ் ஜெயின் முதலில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் மே 17-ம் தேதி செயத் உஸ்மான் கோவையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருந்தார். தலைமறைவாக இருந்த இம்ரான் பாஷா தற்போது பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் போக கோவையைச் சேர்ந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மேலும் 3 பேரை தேடி வருகிறோம். இந்த மோசடியில் ஹாஷ்பே நிறுவனம் மட்டுமல்ல, பல இணை நிறுவனங்களும் சம்மந்தப்பட்டுள்ளன. மோசடி பணத்தை வெளிநாடுகள் உட்பட பல இடங்களுக்கு அனுப்பியுள்ளனர். அடுத்தக்கட்ட விசாரணைகளில் இவை முழுமையாக ஆராயப்படும்” எனத் தெரிவித்தார் ஆய்வாளர் கீர்த்தி

பணத்தை மீட்க முடியுமா?
சைபர் குற்றங்களைக் கையாளும் காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், “கிரிப்டோகரன்சி என்பது அரசால் அங்கீகரிக்கப்பட்டது அல்ல. பல பெயர்களில், பல குழுக்கள் வெவ்வேறு தளங்களில் இயங்குகின்றன. கிரிப்டோகரன்சியை மைனிங் செய்வதில் தொடங்கி அவற்றைப் பதிவு செய்து, தளத்தை உருவாக்கி, விற்பனை செய்வது என இதில் பல கட்டங்கள் இருக்கின்றன. இதில் திரட்டப்படும் பணம் வங்கிகளையும் கடந்து செல்வதால் அவற்றை மீட்பது கடினமான ஒன்றாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
சைபர் சட்ட வழக்கறிஞரான ந.கார்த்திகேயன் கூறுகையில், “பணத்தை இழந்துவிட்ட நிலையில் முதலீடு செய்தவர்களிடம் உள்ள ஒரே தகவல் அவர் பணத்தை அனுப்பிய வங்கி கணக்கு விவரங்கள் தான். மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் பிறரின் வங்கிக் கணக்கை அவர்களுக்கே தெரியாமல் பயன்படுத்துகின்றனர். இதனால் மோசடி செய்யப்பட்ட பணம் அடுத்து எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதை அறிவது கடினமாகிறது” என்றார்.
நடிகைகள் மீது என்ன நடவடிக்கை?

இதனை விளம்பரப்படுத்தும் பிரபலங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும் என்கிறார் கார்த்திகேயன், “2019-ல் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களில் இதற்கான ஷரத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது யாராவது தவறாக வழிநடத்தும் விளம்பரங்களில் நடித்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் மீது வழக்குத் தொடர முடியும்.”
“காவல்துறை கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்கையில் பாதிக்கப்பட்டவர்கள் நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் புகார் அளித்து நிவாரணமும் பெற முடியும். பார்வையாளர்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களில் ஒருவர் முதன் முறையாக நடித்தால் ரூ.10 லட்சம் வரை அபராதம் மற்றும் ஓராண்டு வரை விளம்பரங்களில் நடிக்க தடை விதிக்க முடியும். மீண்டும் இதே தவறைச் செய்தால் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதித்து மூன்று ஆண்டுகள் வரை தடை விதிக்க முடியும். இவை விளம்பரத்தை எடுப்பவரில் இருந்து அதில் நடிப்பவர் வரை அனைவருக்கும் பொருந்தும்” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU