SOURCE :- BBC NEWS

பெரம்பலூரில் கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்ட தேர் திருவிழா

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான வேத மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடைசி நேரத்தில் நீதிமன்ற உத்தரவால் நிறுத்தப்பட்டது.

ஜூன் 10-ம் தேதி வேத மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்கான பணிகள் தொடங்கின. ஆனால், ஊரில் உள்ள மற்றொரு கோவிலான வேதநாராயண பெருமாள் கோவில் முன்புறம் அலங்கரிக்கப்பட்ட தேர் அப்படியே நிறுத்தப்பட்டது.

என்ன பிரச்னை? இது குறித்த விவரங்களை அறிய வேப்பந்தட்டைக்கு சென்றது பிபிசி தமிழ்.

சில போலீசாரை தாண்டி தான் ஊருக்குள்ளே செல்ல முடிந்தது.

வேதநாராயண பெருமாள் கோவில்  முன்புறம் தேர் வண்ணத்துணிகளால் அலங்கரிக்கப்பட்டுநிறுத்தப்பட்டிருந்தது.

தேரை சுற்றி 10-க்கும் மேற்பட்ட பேரிகார்டுகள் வளையம் போல் வைத்திருந்தனர். அருகிலேயே 5 போலீசார் பாதுகாப்பாக நின்றிருந்தனர்.

பட்டியல் பிரிவினர் குற்றச்சாட்டு

கடந்த 1992 -ஆம் வேத மாரியம்மன் கோவிலுக்கு தேர் செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, 1993-ஆம் ஆண்டு தேர் விடப்பட்டது. அப்போது பட்டியல் பிரிவினருக்கும் மற்ற சாதியினருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் பின்னர் தேர் நிறுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு(2024) மீண்டும் தேர் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்ட போது, தங்கள் தரப்பை பிற சாதியினர் அழைக்கவில்லை என பட்டியல் பிரிவினர் கூறுகின்றனர்.

கோவிலை தாண்டி ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்றோம்.

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வினோத், ” கடந்த ஆண்டே தேர் திருவிழாவின்போது எங்களுக்கும் வழிபாட்டு உரிமை வேண்டும் என்று நாங்கள் கேட்டோம். ஆனால் தேர் இழுக்கும் போது சில பிரச்னைகளுக்கு பிறகு தான் நாங்கள் தேங்காய் உடைக்கவும், வழிபாடு செய்யவும் அனுமதிக்கப்பட்டோம். தேரையும் வடம் பிடித்து இழுத்தோம்

அப்போது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அடுத்த முறை தேர்த் திருவிழா நடத்தும்போது பட்டியல் பிரிவினரையும் அழைத்து பேசி முடிவெடுங்கள் என்று அறிவுறுத்தினர். ஆனால் இந்த முறையும் எங்களை அவர்கள் அழைக்காமல் புறக்கணித்தனர். எங்களைக் கேட்காமலேயே தேர்த் திருவிழாவுக்கு தேதி குறித்து பத்திரிகை அச்சடித்தனர். உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் மனு அளித்தோம்.” என்று கூறினார்.

பெரம்பலூரில் கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்ட தேர் திருவிழா

“வேத மாரியம்மன் கோவில் அறநிலையத்துறைக்கு சொந்தமானது அதனால்தான் நாங்கள் உரிமையை கேட்கின்றோம். இந்த ஆண்டு தேர் திருவிழாவிற்கு எங்களிடம் வரி கேட்கவில்லை. நாங்கள் தந்தாலும் நன்கொடையாகதான் தர வேண்டும் என்றனர். உண்டியலில் காணிக்கையாக போடுங்கள் என்றனர்.

மேலும் எங்கள் பகுதியில் உள்ள செல்வ மாரியம்மன் கோவில் அருகில் வந்து வழிபாடு செய்து மீண்டும் தேரை இழுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால், தேர் உங்கள் பகுதிக்கு வராது என கூறிவிட்டனர். கடைசியாக சப் கலெக்டர் கோகுல் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையிலும் ‘வழக்கம்போல் நடைபெறும்.. வழக்கம்போல் நடைபெறும்’ என்ற வார்த்தை தான் எதிரொலித்தது, எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.” என்கிறார் வினோத் குமார்.

இந்தநிலையில் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கையடுத்து, தேர் திருவிழா நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.

அழகு துரை

‘தேர் என்றால் மட்டும் பிரச்னை வருகிறது’

பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள செல்வ மாரியம்மன் கோவிலில் இருந்த அழகு துரை, ”எங்களை மேளம் அடிப்பது உள்ளிட்ட வேலைகள் செய்வதற்கு மட்டும் அழைக்கிறார்கள். ஆனால் தேர் திருவிழாவிற்கு மட்டும் அழைக்க மறுக்கின்றனர்.தேர் நாங்கள் வசிக்கும் பகுதிக்கு வரவேண்டும்” என்றார்

”எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மக்கள் பொங்கல் வைத்து சாமி கும்பிடுகிறார்கள். ஆனால் தேர் என்று வந்தால் மட்டுமே பிரச்னை வந்துக்கொண்டே இருக்கிறது என்பது வருத்தமாக உள்ளது” என்றார் பட்டியலின பெண் ஒருவர்.

‘கடைசி நேரத்தில் நிறுத்திவிட்டனர்’

வேம்பு

தேர் நின்று கொண்டிருந்த வேத நாராயண பெருமாள் கோவில் அருகில் வந்தோம்.

கோவிலுக்கு அருகில் உள்ள வீட்டில் வசித்து வரும் மற்றொரு சாதியை சேர்ந்த வேம்பு எனும் பெண், ”கடந்த ஜூன் 10-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நாங்கள் மிக சந்தோஷமாக இருந்தோம். தேர் எப்படியும் இழுக்கலாம் என்ற மனநிலையில் உறவினர்கள் எல்லோரும் வந்திருந்தனர். ஆனால் பதினோரு மணிக்கு மேல் போலீஸ் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது .நாங்கள் அவர்களிடம் தேர் விழா நடக்கும் தானே என்று கேட்டோம். அவர்கள் சரியான பதிலளிக்கவில்லை .நேரம் செல்லச் செல்ல போலீசார் எண்ணிக்கை 100-க்கு மேல் அதிகரித்தது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது அதனால் பொறுமையாக இருங்கள் தீர்ப்பு வரட்டும் என்று கூறினார்கள். 3-மணிக்கு மேல் பேரிகார்டுகள் எடுத்து வந்து தேரை சுற்றி போலீஸார் வைத்து தேர் திருவிழாவை நிறுத்திவிட்டனர்.” என்றார்.

மேலும், ”நாங்கள் தேர் ஓட்டும்போது பட்டியல் பிரிவு மக்கள் பிரச்சனை செய்கிறார்கள் . மேலும் அவர்கள் தேர் இழுக்கவோ, வழிபாடு செய்யவோ நாங்கள் தடை போடவில்லை. நாங்கள் அவர்களை பிரிக்கவில்லை. இங்கு பலதரப்பட்ட சமூகத்தினர் இருக்கின்றார்கள் எல்லோரும் வசிக்கும் இடத்திற்கும் தேர் செல்வது இல்லை. வழக்கம்போல் நான்கு சந்திக்கல் வழியாக மட்டுமே தேர் செல்லும் அந்த வழித்தடத்தில்தான் செல்ல வேண்டும் என்பது எங்கள் விருப்பம். இது எல்லா ஊர்களிலும் உள்ள முறையாகும் .மயிலாப்பூர் தேர், சிதம்பரம் தேர், திருவாரூர் தேர் என எந்த தேராக இருந்தாலும் அது தேரோடும் வீதி வழியாக மட்டும் தான் வரும்.” என்றார் அவர்.

‘அமைதி பேச்சு வார்த்தை’

தேரோட்டம் தொடர்பாக மூன்று முறை அமைதி பேச்சுவர்த்தை நடைபெற்றதாக வேப்பந்தட்டை தாசில்தார் துரைராஜ் கூறினார்.

மேலும், இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளதால் இது தொடர்பாக தொடர்ந்து என்னால் பேச இயலாது என்றார் துரைராஜ்.

இதே கருத்தையே பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேராவும் மற்றும் சப் கலெக்டர் கோகுலும் கூறினர்

பெரம்பலூரில் கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்ட தேர் திருவிழா

நீதிமன்றம் உத்தரவு

இது தொடர்பாக பட்டியல் சமூக மக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு தேர் சென்று வர வழித்தடம் சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்ய சட்ட பணிக்குழுவை நீதிமன்றம் அமைத்துள்ளது.

முன்னதாக குறிப்பிட்ட தெருக்கள் குறுகலானவை என்பதால் தேர் செல்வதில் சிக்கல் உள்ளது என்று தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் ஜூலை மாதம் 8ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU