SOURCE :- BBC NEWS

பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண் மீது ‘வெறுப்பு தாக்குதல்கள்’ – நடத்துவது யார்?

பஹல்காம் தாக்குதல், வினய் நர்வால், ஹிமான்ஷி
5 மே 2025, 16:51 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

எச்சரிக்கை: இதில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம் சங்கடம் தரக்கூடும்.

“முஸ்லிம்கள், காஷ்மீரிகள் மீது வெறுப்பை காட்டாதீர்கள்” பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த ஒரு பெண் இப்படிப் பேசிய பிறகு இணையத்தில் அவதூறுகளை சந்தித்து வருகிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்திய கடற்படையைச் சேர்ந்த 26 வயதான லெப்டினன்ட் வினய் நர்வால் அவரது மனைவி கண் முன்பே கொல்லப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே தனது  கணவர் சடலத்தின் முன் ஹிமான்ஷி அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியானது இந்த துயர நிகழ்வின் தீவிரத்தை காட்டுவதாக இருந்தது.

திருமணம் முடிந்து ஆறே நாட்களில் தேனிலவுச் சுற்றுலாவில் கணவனை இழந்த ஹிமான்ஷி, வினய்க்கு கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்த காணொளி இது. தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் தனது கணவரின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை இறுகப் பிடித்து அழுதார்.

வினய் நர்வாலின் உடலுக்கு அவரது தந்தையும், சகோதரியும் இறுதி மரியாதைகளைச் செய்ய, மூன்று சுற்று குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது.

தனது மகனின் சாம்பலை ஹரித்வாரில் கரைக்கச் சென்றபோது அவரது தந்தை உடைந்து அழுதார்.

முதலில் ஸ்விட்சர்லாந்துக்கு திட்டமிட்டிருந்த தேனிலவு பயணம் பின்பு காஷ்மீருக்கு மாற்றப்பட்டதற்கான காரணத்தை வினய் நர்வாலின் தாத்தா விவரித்தார்.

சில நாட்களுக்கு முன் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் அவலத்தின் ‘சாட்சியாக’ அறியப்பட்டவர் ஹிமான்ஷி நர்வால். ஒரு புதுமணத் தம்பதியின் வாழ்க்கையை சிதைத்த தீவிரவாத தாக்குதலின் கோரத்தை பற்றி குறிப்பிடுகையில் சமூக ஊடகங்களில் பயனர்கள் சிலர் வெறுப்பை பரப்பும் நோக்கில்,  முஸ்லிம்கள், காஷ்மீரிகளை ‘குறிவைக்க’ ஹிமான்ஷியின் இழப்பை பயன்படுத்திக் கொள்வதாக விமர்சனங்கள் எழுந்தன.இந்தச் சூழலில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் தனது கணவனை இழந்த ஹிமான்ஷி பேசியது இதுதான்.

இந்த சிறு காணொளி வெளியான பிறகு, சில இணையக் குழுக்கள், சமூக ஊடக பயனர்கள் ஹிமான்ஷியை குறிவைத்து தாக்கி மோசமாக எழுதத் தொடங்கினர்.

அதே சமயம், இத்தகைய இணையத் தாக்குதல்களுக்கு எதிராக கண்டனங்களும் எழுந்தன. இந்தச் சூழலில் தேசிய மகளிர் ஆணையம் இதை  கண்டித்துள்ளது.

அந்த பதிவில், “கடற்படை வீரர் வினய் நர்வாலின் மறைவுக்குப் பிறகு அவரது மனைவி தெரிவித்த ஒரு கருத்துக்காக அவர் சமூக ஊடகங்களில் குறிவைக்கப்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது அவரது கொள்கை ரீதியான கருத்துக்காக அவரை கிண்டல் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.” என தெரிவித்துள்ளது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU